Thursday 25 August 2011

பீற்றற் பெருமை



பெருமூச்சொன்று பெரிதாகப் புறப்பட
புருவங்கள் சுழித்துச் சுருங்க..
இரு கண்கள் சோர்ந்து மூட..
இருக்கையிலே சாய்ந்து கொண்டேன்

சின்ன நகைப்பொலி நெஞ்சை வருட
பின்னே திரும்பினேன் அங்கே அவள்....
அவ்வப்போது எனக்குள் வந்து
சீண்டிப் பார்ப்பவள்....
கடுமையாய் கேள்வி கேட்டு
கடுப்பேற்றுபவள்...
மெல்லத் தொடங்கினாள்....
என்ன வேலை கனமோ..?
நிமிர்ந்து உட்கார்ந்து
தொண்டையைச் செருமினேன்
எனக்கென்ன குறை தோழி...?
அவசர உலகோடு நான்
அனுதினமும் போட்டியிடுகிறேன்
காலையை மாலையாக்கவும்
மாலையைக் காலையாக்கவும்
கற்றுக் கொண்டேன் தெரியுமா?
நித்திரா தேவியுடன் நான்
நித்தமும் போர் தொடுக்கிறேன் -மிகவும்
பொறுப்புள்ள தொழிலாளி நான்
சவரிலே குளிப்பு, சுவரிலே படம்
மெத்தையில் தூக்கம்இ மேசையில் சாப்பாடு
எத்தனை ஆடம்பரம் என் வாழ்வில்..
பித்தனைப்போல் பிதற்றியபடி
அவளைப் பார்த்தேன்... அதிர்ந்திட்டேன்
அத்தனை கேலி அவள் பார்வையில்...
இப்போது அவள் அந்த அர்த்தமுள்ள
நாட்டார் பாடலின் வரிகளை
மீட்டிவிட்டு மறைந்து போனாள்...

'இறகெல்லாம் பிடுங்கையிலே
இறகெல்லாம் பிடுங்கையிலே
என்னண்டு சொல்லிச்சாம் கோழிக் குஞ்சு.....
நான் 'ஹெயார் கட்”எடுக்கிறன் 'ஹெயார் கட்” எடுக்கிறன்
அப்பிடீன்னு சொல்லிச்சாம் கோழிக் குஞ்சு

எண்ணெயில பொரிக்கையில
எண்ணெயில பொரிக்கையில
என்னண்டு சொல்லிச்சாம் கோழிக் குஞ்சு.....
நான் 'ஒயில் பாத்” எடுக்கிறன் 'ஒயில் பாத்” எடுக்கிறன்
அப்பிடீன்னு சொல்லிச்சாம் கோழிக் குஞ்சு”

மூச்சடக்கி மௌனமாகிப்
போர்வைக்குள் புகுந்து கொண்டேன்

Friday 19 August 2011

உத்தர வாதமில்லா வாழ்க்கை...


எத்தனை துன்பங்கள் நாம் கண்டோம்
அத்தனையும் போதாதென்று இன்று
சித்தம் கலங்கிய சிலாரின் மர்ம வேட்டை
செத்துப் பிழைத்த எங்களுக்கு
பித்தர்கள் புதுவிதமாய்
வித்தகம் காட்டுகிறார்... கிறீஸ் மனிதராம்
புத்தரின் புத்திரர் எப்போதும் என்ன
ரத்தப் பிரியரோ...
இத்தரையில் வாழும் வரை தமிழர்க்கு
உத்தர வாதமில்லா வாழ்க்கை...இன்னும்
எத்தனை காலம் தான் இது தொடரும்...

Wednesday 10 August 2011

அய்யோடா....

என்ன கொடுமையடா நம்ம பிழைப்பு
அன்னை மண்ணில்தான்
குண்டு வெடிப்பு.. கந்தகப்புகை..
பஸ் நிறுத்தம்... போலீஸ் சுற்றி வளைப்பு...


உயிரைக் கையில் கொண்டு
ஓடி ஒழிந்து வந்து
அகதி நிலையினிலே அந்நிய நாடு வந்தால்...
இங்கேயும் கலவரமா....
பாவி போன இடம் எல்லாம்
பள்ளமும் திட்டியும் தானா...
மீண்டும் ஒரு முறை
கலவரம் உணர வைத்தார்
கறுப்பினச் சகோதரர்கள்...
அய்யோடா...

Wednesday 3 August 2011

இந்தக் கடுகுதான் இத்தனை காரமா?....

அழகிய மொழிநடை..... அத்தனையும் தனிநடை
காரமான விடயங்கள்... காத்திரமான கருத்துக்கள்
அன்புடன் தம்பி..... இப்படித் தொடங்கியது தான் அந்த உறவு
எத்தனை பெரிய விடயத்தையும் இத்தனை
இலகுவாய் இனிக்கத் தருகிறானே...
சிற்பத்தை இரசித்த எனக்கு அந்த சிற்பியைக் காண ஆசை
எப்படியிருப்பான்... எழுத்தின் படியே கொஞ்சம்
எடுப்பாக.. கடுப்பாக... எப்படியோ.. அவனைக் காணவேண்டும்
அந்த எழுத்துக்காக... அதன் வலிமைக்காக....
மீண்டும் எழுதினேன்... அன்புடன் தம்பி...
ஊருக்கு வருகிறேன்... உன்னைக் காணலாமா....
பதிலில்லை... பரிதவித்துப் போனேன்...
பதிலைக் காணோமே... பயந்தாங்கொள்ளியோ...
பலவாறு எண்ணம் ஓட கொஞ்சம் கவலை...
எதிர்பாராத ஒரு நாளில் என் தொலைபேசியில் அவன்...
எங்கே நிற்கிறீர்கள்... இதோ வந்து கொண்டிருக்கிறேன்..
அடுத்த சில மணிகளிலே... வீட்டு வாசலிலே...மோட்டார் சைக்கிளிலே...
அடேயப்பா... இந்தக் கடுகா... அத்தனை காரம்.....
கடுகு உருவத்தில் மட்டும் தான்....
இந்தக் குழந்தைச் சிhpப்பு அதன் எழுத்துகளில்
இம்மியளவுகூட இல்லையே...
ஆனால் அந்தக் காத்திரமான கருத்துக்கள்
அவன் பேச்சிலும் கூட....
யாழ்மண்ணில் ஒளிர்கின்ற பிரமாண்ட மின்குமிழ்...
நிச்சயமாய் அவன் எதிர்காலம் நின்று ஜொலிக்கும்...
சமூகத்தை நேசிக்கும் அவன் சரித்திரத்தில் நிமிர்வான்...
தனக்குத் தொpந்ததை எல்லோருக்கும் கற்றுக் கொடுக்கும்
தாராள மனம் படைத்தவன்.....
அட.... யாரது என்று யோசிக்கிறீர்களா...
வேற யாரு... நம்ம சுதா... மதிசுதா தானுங்கோ....
அவன் பெயருக்கு முன்னால் அந்த மதி...
அவனுக்குப் பொருத்தமானதே...
வாழ்க நீ.... வளர்க உன் திறன்...
நீள்க உன் சேவை.... நிறைவோடு வாழ்க...
(யாராவது பொறாமைப்படாதீங்க.... எனக்கு காய்ச்சல் வந்திடும்!!!)