Sunday 13 October 2013

அவள் அப்படித்தான் - நிறைவுப் பகுதி

தொடர் 4

இந்தியாவுக்கு போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் கனகம் வீட்டுக்கே சென்று விட்டான் சுகிர்தன்.

அன்று தான் மீண்டும் மீனுவை நேருக்கு நேர் சந்தித்தான். அப்பொழுதும் சுந்தரி அவளை இழுத்துப் பிடித்து வைத்திருந்தாள். ஒரு முடிவுக்கு வந்தவனாக சுந்தரியிடம் தன் கருத்தைச் சொன்னான்.



“அம்மா, மீனுவை நீங்கள் விடுங்கோ. நான் ஒண்டும் பிழையா நினைக்கிறதுக்கு இல்லை. அது மட்டுமில்லாமல், எனக்கு அவளைப் பார்க்கேக்குள்ள ஒரு வித்தியாசமான நினைப்பும் வரல்ல... அவள் ஒரு குழந்தையா தான் எனக்கு தெரியிறாள். எப்படியோ இந்தியா வரைக்கும் அவளோட நானும் வரப்போறன். எவ்வளவுக்கெண்டு உப்பிடித் தடுப்பியள்?” அவன் கேட்டது நியாயம் என்று பட்டாலும் சுந்தரிக்கு அயலவர்களின் விமர்சனத்தை நினைத்துப் பயந்தாள்.


“ஒண்டுக்கும் பயப்படாதேங்கோ அம்மா... சில விசயங்களில சமூகத்தை நினைச்சுப் பயந்தால், நாங்கள் வாழ ஏலாது...மீனுவின்ர நிலையில இருந்து சமூகத்தால சிந்திக்க முடியாது...” என்ற அவனது வார்த்தைகளுக்கு பிறகு, வயிற்றில் நெருப்பைச் சுமந்தவாறே மீனுவை அவள் போக்குக்கு விட்டாள் சுந்தரி.

“பூஸ்.. பூஸ்...என்னை விட்டிட்டு போகதடா... பாருடா இந்த அம்மாவை, உனக்கு கிட்ட வரவே விடுறா இல்ல...” என்று அழுதபடியே அவனிடம் ஒட்டிக் கொண்டிருந்தவளிடம் இப்பொழுது சுகிர்தன் பூவரசனாகவே பேசத்தொடங்கினான்.

“மீனு, நீ நான் சொல்றபடி நடந்தால் தான் உன்னை பார்க்க வருவேன். நீ என்னோட தாராளாமா கதைக்கலாம். ஆனால் நீ சின்னப் பிள்ளை இல்லையெல்லோ. அது தான் அம்மா கிட்ட வர விடேல்ல. நீ இந்தக் கதிரையில இரு. அம்மா ஒண்டும் சொல்ல மாட்டா.” என்று அருகில் இருந்த கதிரையில் அமர்த்தினான்.

சிறுவயதில் இருந்து பூவரசனோடு ஒன்றாகப் பழகிய மீனு எப்படி சுகிர்தனை பூவரசனாக நம்புகிறாள் என்பது அவனுக்குப் புரியாத ஒன்று. தன்னைப் பூவரசன் என்று அவள் நம்பினாலும் அப்படிச் சொல்லி அவளோடு பழகுவது அவனுக்கு பெரும் சங்கடமாகவே இருந்தது. ஆனால் பூவரசனாக அவன் நடந்து கொண்டபடியால் தான், தொடர்ந்து வந்த நாட்களில், இந்தியப் பயணங்களில் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்த முடிந்தது. சுந்தரி சமூகத்துக்குப் பெரிதும் பயந்தாலும், சுகிர்தனை தப்பாக நினைக்கும்படி அவன் நடத்தையில் எந்தக் குறையையும் காணவில்லை. மாறாக அவனை ஆபத்தில் கை கொடுக்கும் தெய்வமாகவே எண்ணினாள்.



கேரளாவில் மருத்துவரை ஒழுங்குபடுத்திக் கொடுத்த நண்பன், அவனுக்கு தங்குமிடத்தோடு, அவனுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்ய ஒருவரையும் அறிமுகப்படுத்தியிருந்தான். அதனால் அவன் எந்த விடயத்திலும் அதிகம் சிரமப்பட வேண்டியிருக்கவில்லை. ஆனால் சுந்தரிக்கு எல்லாமே பயமாக இருந்தது. புதிய இடம், புதிய மொழி புதிய ஆட்கள் என எல்லாம் அவளுக்கு குழப்பமாகவே இருந்தது. கையில் பணாம் இல்லை. யாரோ ஒருவர் உதவ முன்வந்தார் என்பதற்காக அவரின் செலவிலேயே எப்படிக் காலம் தள்ளுவது என்று சங்கடமாக இருந்தது. அதைவிட சுந்தரிக்கு எப்போதும் இருந்துவந்த ஆஸ்துமா அவளை வாட்டியெடுக்க ஆரம்பித்தது.



ஆறுமாதங்கள் கடந்துவிட்டது.  விரைவிலேயே ஊருக்குப் போய்விடலாம் என்றால், சிகிச்சைகள் நடந்துகொண்டிருக்கின்றபடியால், மீனு தொடர்ச்சியாக தங்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டுமென்று மருத்துவர் சொல்கிறார். என்ன செய்வதென்று புரியாமல் குழம்பிய போது, சுகிர்தன் அந்தத் திட்டத்தை முன்வைக்கவும், அதிர்ந்து போனாள்.

“அம்மா, உங்களுக்கு கஸ்ரமா இருந்தால் நீங்கள் ஊருக்குப் போங்கோ. மீனுவை நானே பார்த்துக் கொள்ளுறன்..”

“தம்பி, இதுவரைக்கும் நீங்கள் சொன்னபடி கேட்டிருக்கிறன். ஆனால் இந்த விசயத்தில நான் உடன்பட மாட்டன். ஒரு பொம்பிளைப் பிள்ளையை இந்த நிலமையில உங்களிட்ட விட்டிட்டு போனால்…”

“அம்மா, என்னில உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? இவ்வளவு செய்த நான் அவளுக்கு பாதுகாப்பு கொடுக்க மாட்டனா?”

“அப்படி இல்லை தம்பி. நீங்கள் நல்லவர் இல்லை எண்டு நான் சொல்லேல்ல... ஆனால், எங்களுக்கெண்டு ஒரு கலாச்சாரம், கட்டுப்பாடு இருக்கெல்லோ… அதை எப்படி மீற முடியும்.. கலியாணமாகாத ஒரு குமரை ஒரு இளம் பெடியனிட்ட எந்த தாய் விட்டிட்டு போவா?.. அதைவிட அந்தப்பிள்ளை பைத்தியம் எண்ட பெயரோட இருக்கட்டும். ” குமுறிக் கொண்டு வந்தன சுந்தரியின் வார்த்தைகள்.



சுந்தரியின் விவாதம் சரியாகப் பட்டாலும், மீனுவின் சிகிச்சையைக் குழப்ப விரும்பவில்லை சுகிர்தன். இந்த ஆறு மாதத்துக்குள் மீனுவிடம் பல முன்னேற்றங்கள் தெரிந்தன. அவள் தன் வேலைகளைத் தானே செய்யுமளவுக்கு முன்னேறியிருந்தாள். சில சில விடயங்கள் அவளது ஞாபகத்துக்கு வந்திருந்தன... சில விடயங்களாஇ அறிவுபூர்வமாக சிந்திக்க ஆரம்பித்திருந்தாள்.

“அம்மா, இப்ப மீனுவுக்கு வைத்தியம் நடக்கும்போது குழப்ப ஏலாது. இடையில குழப்பினால் அது அவளுக்கு இன்னும் கனக்க பாதிப்பைக் கொண்டு வரக்கூடும்.... உங்களால இங்க இருந்து சமாளிக்க முடியாமல் இருக்குதெண்டு தான் நான் போகச் சொன்னன். உங்களுக்கு வருத்தம் வந்தால் இங்க யார் பார்க்கிறது.. அங்கயெண்டாலும் பூவரசன்ர அம்மா உங்களைக் கவனிப்பா..”

“இல்ல… குமர்ப்பிள்ளையை…” சுந்தரி ஆரம்பிக்கும்போதே தடுத்தான்.

அம்மா, வைத்தியத்துக்கும் குமர்ப்பிள்ளைக்கும் முடிச்சு போடாதேங்கோ. இப்ப என்ன… மீனுவுக்கு கலியாணத்தில பிரச்சனை வரும் எண்டு பார்க்கிறீங்களோ???  மீனுவுக்கு சுகமாகி, கலியாணம் செய்ய சம்மதிச்சால்.... நானே கட்டுறன்… இதை நீங்க நம்புறதுக்கு நான் என்ன செய்ய வேணுமோ செய்யிறன்…. என்ர உயிர்நண்பன் மேல சத்தியம்….”

மூச்சுவிடாமல் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய சுகிர்தனை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தாள் சுந்தரி. சுகிர்தனும் கூட எப்படி இந்த வார்த்தைகள் தன் வாயில் இருந்து வெளிவந்தன என்று தன்னைத் தானே ஆச்சரியமாக நோக்கினான். அதற்கு மேல் சுந்தரியால் எதுவும் பேச முடியவில்லை. மீனு குணமாகிய பின்னரும் அவளுக்கு திருமணமென்பது எந்தளவுக்கு சாத்தியம் என்று தெரியாத நிலையில், இன்று இவனே இப்படி ஒரு முடிவை எடுத்தது சுந்தரிக்கு உள்ளூர பாரம் குறைந்தது போல இருந்தாலும் கலக்கமாகவே இருந்தது. இன்னும் இரண்டு மாதங்கள் தங்கிவிட்டு, மிகுந்த மனப்போராட்டத்தின் பின்னர் சுந்தரி இலங்கைக்குத் திரும்பிப்போனாள்.

இந்த விடயம் தெரிந்து குழம்பியவர்கள் சுகிர்தனின் பெற்றோர் தான். சுந்தரியிடம் கூட போய் சத்தம் போட்டார்கள். ஆனால், தன் நண்பனுக்காக சுகிர்தன் தான் எடுத்த முடிவில் உறுதியாய் இருந்ததன் விளைவு தான் இன்றுவரை எந்த உறவுகளின் உதவியும் இன்றி மீனுவைத் தொடர்ந்து பராமரித்து வருகிறான். நண்பர்களின் உதவியோடு தனக்கேயான திறமையினால் வீட்டில் இருந்தே வலைத்தள வடிவமைப்பாளராக வேலை செய்வதோடு, தினமும் காலையில் 4 மணிநேரம் ஒரு தனியார் கல்வி நிலையத்தில் பாடசாலை முடித்து கல்லூரிக்கு போகக் காத்திருக்கும் மாணவர்களுக்கு டியூசன் சொல்லிக் கொடுப்பான். தன்னுடைய தனி முயற்சியால், தன் காலைப் பலப்படுத்தி அவன் வைத்திருப்பது அத்தனையும் மீனுவுக்காக. நண்பனுக்காக மீனுவைக் காப்பாற்றவும் பின்னர் வாழ்வு கொடுக்கவும் நினைத்த சுகிர்தனின் உள்ளத்தில் இப்பொழுது மீனுவே முழுவதுமாய் நிரம்பியிருக்கிறாள்.

அமைதியாக சலனமின்றி உறங்கிக்கொண்டிருக்கும் மீனுவின் மிருதுவான அந்த முகத்தைப் பார்க்கும் போது அவனுள் ஒரு ஏக்கம் கொப்பளிக்கிறது. மெல்ல அசைந்த மீனுவின் உதடுகள் “பூஸ்....நீ என் காதல்டா...” என்று முணுமுணுத்தன. அதைக் கேட்டதும் திடுக்குற்றான் சுகிர்தன். ஏனென்றால், அவளுடைய மீட்கப்பட்ட நினைவுகளின் சிதறலே அது. அன்றொரு நாள் புதியவன் சுகிர்தனிடம் சொல்லியிருந்தான்..

“மச்சான், என்ர ஆள் தமிழ்ல எவ்வளவு பற்று எண்டு சொல்லுறன் கேள்... ஐ லவ் யூ எண்டு இங்கிளீஸ்ல சொல்ல மாட்டாவாம்... அதுக்குப் அதிலா தமிழ்ல “நீ என் காதல்டா” என்று சொல்லுறா....”

 இதைக் கேட்டதும்

 “அட... இது நல்லா இருக்கே.. அதுக்கு நீ எப்படி பதில் சொல்லுவ??? அது தான் ‘ஐ லவ் யூ டூ...’ என்று சொல்லணுமே...”

என்று சிரித்தபடி கேட்க,

“ம்ம்.. அதுக்கும் சொல்லித் தந்தா... ‘என் காதல் நீ தாண்டா....’ அப்படி சொல்ல வேணுமாம்...”

என்ற புதியவனை ஆச்சரியமாகப் பார்த்தான்.

“தமிழில பற்று இருக்கத்தான் வேணும் மச்சான்... அதுக்காக இதில கூடவா???” என்று வினோதமாகப் பார்த்த சுகிர்தனிடம்...

“ம்ம்... அவள் அப்படித்தான் மச்சான்... அவள் அப்படித்தான்.....”

என்று சொல்லிவிட்டு புதியவன்... மீனுவின் பூவரசன்... விழுந்து விழுந்து சிரித்தது இன்று கண்முன் வந்து நின்றது....

மீனுவின் உடல் நிலை பெரிதும் தேறியிருக்கிறது. சில நினைவுகள் அவ்வப்போது மீண்டு கொண்டிருக்கின்றன. சில நினைவுகள் மட்டுமே திரும்பாமல் இன்னும் இருக்கிறது. அவள் உடல்நிலை வேகமாகத் தேறி வரும் இந்த நிலையில் அவளுக்கு எப்போதாவது பூவரசன் பற்றிய நினைவுகள் முழுமையாகத் தெளிவடையலாம்... அப்பொழுது பூவரசனின் முகத்திரையோடு வாழும் இவன் நிலை எப்படியும் ஆகலாம்....

அதுவரை ஏங்கங்களோடு காதலையும் சுமந்தபடி, ஒரு குழந்தைக்குரிய அன்பையும் பராமரிப்பையும் மட்டும் அவளுக்குக் கொடுத்துக் கொண்டே காத்திருக்கிறான் அவளுடைய பூவரசனாக....

மீண்டும் சற்றுப் பலமாகவே மீனு முணுமுணுத்தாள்..

“பூஸ்... நீ என் காதல்டா...”

“என் காதல் நீ தாண்டா..” என்று சொல்ல சுகிர்தனின் உதடும் மனமும் துடித்தது. ஆனால் அவனையும் முந்திக் கொண்டு விழிநீர் அணையுடைக்க.. கண்களை இறுக மூடிக் கொண்டான்...

அவள் நினைவுகள் மட்டும் பூவரசனையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கின்றன... இனி எந்த ஜென்மத்திலும் அவன் தன்னோடு இருக்க வேண்டும் என்ற வேண்டுதல்களோடே.. ஐ லவ் யூ அல்ல... நீ என் காதல்டா என்பது அவளது தாரகமந்திரமாக இருக்கலாம்....  ஏனென்றால் அவள் அப்படித்தான்...

முற்றும்.


பி.கு: இந்தக் கதை முழுவதும் கற்பனைக் கதையே... இந்தக் கதையில் ‘ஐ லவ் யூ’ என்ற ஆங்கில வார்த்தைக்குப் பதில் தமிழ் வார்த்தையை அறிமுகம் செய்ய வேண்டுமென்று அந்த வார்த்தைகளை ஆலோசித்த நண்பன் வினோத் கன்னியாகுமரி (tamilnanbargal.com) அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

Tuesday 8 October 2013

அவள் அபடித்தான்.. தொடர் 3

தொடர்-3

அடுத்து வந்த எறிகணை விழுந்து வெடித்த போது, அருகில் தான் விழுந்துவிட்டது என்று உள்ளுணர்வு உந்த பதைப்போடு நிமிர்ந்து பார்த்தவன் அதிர்ந்தான்....

புதியவன் படுத்திருந்த இடத்தில் புதிதாக ஒரு குழி மட்டும் தோன்றியிருந்தது. அருகிலிருந்த வீட்டுச் சுவரில் திட்டுத் துட்டாக தசைத்துண்டங்கள் ஒட்டிக் கிடந்தன. உண்மைதானா ... இது உண்மைதானா... என நம்பிக்கையின்றிக் கேட்டுக் கொண்டிருந்த அவனது அறிவுக்கு அடித்துச் சொல்வது போல.... அவன் தன் பக்கவாட்டில் இருந்த கையை அசைத்த போது கையில் அது தட்டுப் பட்டது....

“மச்சான்.... இஞ்ச பார்த்தியா.. அண்ணை பரிசு தந்த ‘மெமரிவோச்’... சாகும் வரைக்கும் இது இனி என்ர கையில தான்.....”

என்று புதியவன் அன்றொருநாள் முகம் நிறைய மகிழ்ச்சியோடு காட்டிய, தமிழீழத் தேசியத்தலைவரிடம் பரிசாகப் பெற்றுக் கொண்ட அந்த அழகிய கறுப்புக் கைக்கடிகாரம்... அவன் சொன்னது போலவே அவன் கையை விட்டுக் கழராமல்...மணிகட்டோடு அவன் கையருகில் புழுதுபடிந்து கிடந்தது...  என்ன நடந்துவிட்டது என்பதை ஊகித்துக் கொண்ட சுகிர்தனின் நினைவுகள், அதிர்ச்சியில் அலறக் கூட நேரமின்றி மெல்ல மங்கிச் சரிந்தன. எறிகணையின் சத்தம் ஓய்ந்திருந்தாலும் சுற்றிலும் கேட்டுக் கொண்டிருந்த மக்களின் அலறல் சத்தம் அங்கே இன்னும் பல உயிர்கள் காவுகொள்ளப் பட்டதைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.

அவனது உயிர்த்தோழனின் தசைத் துண்டங்களைக்கூட பொறுக்கியெடுக்க முடியவில்லை. சுகிர்தனின் காலில் பலமான காயம் ஏற்பட்டிருந்தது. அன்றுதான் அவனுக்கும் புதியவனுக்குமான இறுதி உறவு.

************

இதன்பின்னர் எல்லாமே விரும்பத்தகாதவைதான் நடந்தேறி முடிந்தன. விடுதலைப்போர் ஓய்ந்து போக, ஓநாய்களின் வெறித்தனம் வெற்றி கொண்டது. முற்றுகையில் சரணடைந்த சுகிர்தன் இராணுவத்தால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டான். அவனது காலின் காயம் மாறியதும் சில மாதங்கள் சிறைவாசம்... அவனது வேதனைகளையும் துன்பங்களையும் அதிகப்படுத்தும் விசாரணைகளையும் சித்திரவதைகளையும் எதிர்கொண்டபோது புதியவன் கொடுத்து வைத்தவனோ... என எண்ணத் தோன்றியது. அதன் பின்னர் சில மாதங்கள் புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பப்பட்டான் சுகிர்தன். அவனது கால் காயம் மாறியிருந்தாலும் மாறாத வடுவாகத் தன் உயிர் நண்பனின் இழப்பு இருந்துகொண்டே தான் இருந்தது. இப்படியே இரண்டு வருடங்கள் உருண்டோடிவிட விடுதலை செய்யப்பட்டான்.

விடுதலையா? இது தான் இனி வாழ்க்கையா? எப்படி வாழப்போகிறேன்? என அவனது உள்ளம் ஆயிரம் கேள்விகளைக் கேட்டுத் துளைத்தெடுத்தது. எல்லாம் வெறுமையாகவே அவனுக்குத் தோன்றியது. அந்த நிலையில் தான் தன் நண்பன் புதியவனின் தாயாரையாவது ஒருமுறை பார்க்கவேண்டுமென்று விரும்பினான்.

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை... புதியவனின் தாயைப் பார்க்க புதுக்குடியிருப்புக்கு புறப்பட்டான். ஆங்காங்கே புதிதாக அமைக்கபட்ட கொட்டகைகளுக்குள் மக்கள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள்... முனிருந்த புதியவனின் வீட்டை அடையாள்மே காணமுடியவில்லை... எல்லோரையும் போலவே புதியவனின் தாய் கனகமும் தனது வாழ்க்கையை முதலில் இருந்து ஆரம்பித்திருந்தாள்...



புதியவனின் வீட்டு வாசலில் காலை வைத்ததுமே அவனுக்குள் ஒருவித வேதனை நெஞ்சுக்குழியிலிருந்து தொண்டையை வந்து அடைத்துக் கொண்டது. எதேச்சையாக வாசல் பக்கம் திரும்பிய புதியவனின் தாய் கனகத்துக்கு சுகிர்தனைக் கண்டதும், ஒருகணம் மெய் சிலிர்த்தது.. கண்கள் விரிந்தன. பின்னர் அது தன் மகனின் நண்பன் தான் எனக்கண்டதும் ஓடிவந்து கட்டியணைத்து ஓலமிட்டு அழுதாள்.

“அப்பு... என்ர தங்கத்தைச்சு தொலைச்சு போட்டியோடா..... என்ர பூவுத்தங்கம் எங்கயடா.... உன்னோடை தானே சுத்திச் சுத்தி வந்தான்... ஹையோ... பெத்த வயிறு எரியுதேடா.... என்ர பூவு எங்கயடா.... “

என்று சொல்லிச் சொல்லி அழுத அந்தப் பெற்றவளின் வேதனைக் குரல் அருகில் இருந்தவர்களையும் ஒன்றுகூட்டியது.

“இந்தப் பெடியன் தானே பூவரசனோட ஒரே மோட்டசைக்கிள்ள வாறது…” என்று அருகில் நின்ற மூதாட்டியின் குரலுக்கு,

“ஓமணை… பெடி அப்பிடியே பூவரசனை மாதிரி இருக்கிறானணை.. அது தான் கனகக்காவால தாங்கேலாமல் அழுகுது போல…. அவ மனசார அழட்டும்.. எல்லாரும் போங்கோ..” என்று பதிலளித்துவிட்டு தானும் வெளியே நகர்ந்தாள் அந்த நடுத்தர வயதுப் பெண்.

சற்று நேரம் அவனையும் கனகத்தையும் பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்கள் எல்லோரும் மெல்ல மெல்ல விலகிபோயினர்.

சுகிர்தன் அந்தத் தாயின் அழுகை ஓயும் வரை அமைதியாக இருந்தாலும் அவன் கண்களில் இருந்து அணையுடைத்த நீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

அதன்பின் கனகம் சுகிர்தனை அன்போடு உபசரித்தாள். சற்று நேரத்தில் தன் நண்பனின் தாயைப் பார்த்த மன நிறைவோடு வீட்டுக்குக் கிளம்பத் தயாரானவனை கனகத்தின் குரல் தடுத்தது.. “தம்பி, பக்கத்தில தான் பூவரசனின்ர அத்தை வீடு இருக்கு. அப்படியே என்ர பிள்ளை மாதிரி இருக்குற உன்னைப்பார்த்தால் அண்ணி சந்தோசப்படுவா. ஒருக்கால் போய் பார்ப்போமே...’’ என்றதும்.. உடனேயே சம்மதித்தான் சுகிர்தன்.

பூவரசனின் அத்தை வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்ததுமே எங்கிருந்தோ மின்னல் வேகத்தில் ஓடி வந்து சுகிர்தனைக் கட்டியணைத்தாள் அந்த இளம்பெண்.

“பூஸ்.... பூஸ்... வந்துட்டியாடா? இவ்வளவு நாளும் எங்கயடா போன?....”

அதிர்ந்து போன சுகிர்தனால் அந்தப்பெண்ணின் அழுங்குப்பிடியை விட்டு சில நிமிடங்கள் விலக முடியவில்லை. அவளுக்கு பின்னாலேயே வேகமாக ஓடிவந்த அவளுடைய தாய் அவளைப்பிடித்து பலவந்தமாக இழுத்தாள்..

“ஏய் மீனு… என்னடி செய்ற… அது பூவரசன் இல்லையடி… விடு... விடடி….. “

என்று அழுகுரலோடு அந்தத்தாயோடு சேர்ந்து கனகமும் அவளைப் பிரித்து இழுத்துச் செல்ல, அவளோ பெருங்குரலெடுத்து ஓலமிட்டபடியே இழுபறிப்பட்டுக்கொண்டே உள்ளே சென்றாள். சிறிது நேரத்துக்கு சுகிர்தனால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. உள்ளே அவள் தொடர்ச்சியாக அழும் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது. கனகம் அழுத கண்களோடு திரும்பி வந்தாள்.

“தம்பி… குறை நினையாதேங்கோ… இது என்ர அண்ணையின்ர மகள். நல்லா இருந்த குடும்பம்… உந்த சண்டைக்குப் பிறகு எல்லா சந்தோசத்தையும் இழந்திட்டம்…. உந்த பிள்ளை மீனுவைத்தான் என்ர மகனுக்கு பேசி இருந்தனாங்கள்….  அவன் உயிரோட இல்லை எண்டதை பிளையால ஏற்றுக்கொள்ள ஏலாமல் இருக்கு போல…. கடைசிச் சண்டையில அவளும் தலையில காயப்பட்டு கன நாள் அறிவில்லாமல் இருந்தது…. இப்ப அநேகமா ஒண்டும் நினைவில்ல.. ஆனால் என்ர பிள்ளையை மட்டும் மறக்கேல்ல… ஒரே அவனைக் கேட்டு அழுகை…. பாவம் அண்ணி… அண்ணயும் செத்துப்போன பிறகு இந்தப்பிள்ளையை வைச்சு என்ன செய்யிறதெண்டு தெரியாமல் தவிக்குது” தழதழக்கும் அழுகைக்குரலோடு சொல்லி முடித்தாள் கனகம்….

சுகிர்தனுக்கு இப்பொழுது தான் புதியவன் தன் காதலைப்பற்றிச் சொன்னது மூளையில் உறைத்தது. அவன் நெஞ்சுக்குள் ஒரு பெரும் பரிதாப அலை எழுந்து மோதியது…. புதியவன் இப்படித்தான் நடக்கும் என்று எவ்வளாவு துல்லியமாக நம்பினான்.…. அதனால் தானே இவளுக்காக அத்தனை வேதனைப்பட்டான்… என்ன விதி இது.. எனத் தன் நண்பனுக்காக உள்ளம் கசிந்தான் சுகிர்தன். அதிக நேரம் அங்கு நிற்காமல் விடைபெற்றுக்கொண்ட அவன், மனதில் தீராத பெருஞ்சுமையொன்றைச் சுமந்தபடியே அங்கிருந்து வெளியேறினான்.

வீட்டுக்குப் போன பின்னும் கூட அவனால் மீனுவின் அந்த அழுத்தமான அணைப்பையும், அழுகுரலை மறக்க முடியவில்லை.. எப்படி இறுகப்பிடித்தாள்… இனி ஒருபோதும் அவனை இழந்து விடக்கூடாது என்றா?? புதியவன் நம்பியது போலவே மீனு அத்தனை பாசம் வைத்திருந்திருக்கிறாளே… என ஆயிரம் கேள்விகள் அவனைச் சிதறடித்துக் கொண்டிருந்தது. ஒரு வாரமாக அவன் மனம் தன் நண்பனுக்காக வருந்திக்கொண்டிருந்தது. அவனுக்காக ஏதாவது செய்ய முடியுமா எனத் தவித்தான் சுகிர்தன். கடைசியில் மீண்டும் மீனுவைப்போய் பார்க்க முடிவெடுத்தான்.

திரும்பவும் அவன் புதியவனின் வீட்டுக்குச் சென்றபோது கனகம் வழக்கம் போலவே அவனை வரவேற்று உபசரித்தாள். ஆனால் மீனுவைப்பற்றி அவள் சொன்ன விடயம் மனதை உலுக்கியது.

 “தம்பி, நீங்கள் போனதடவை வந்து போன பிறகு  மீனுவின் நிலை மோசமாக இருக்குது... அடிக்கடி மயக்கம் போட்டு விழுகிறாள். சரியா சத்தம் போட்டு கத்துறா...” சொன்ன கனகத்தை கலக்கத்தோடு பார்த்தான்.

“அம்மா, இதுக்கு ஏதும் வழி இருக்கோ? மீனுவை சுகமாக்க ஏலாதோ?”

“என்ன வழி இருந்து என்ன தம்பி... அதுக்கு கையில காசு வேணுமே தம்பி. அண்ணி தனிய இருந்து என்ன செய்வா? எங்கட நிலமையும் இப்படியா கிடக்குது...”

“அம்மா, எனக்கு கொஞ்ச நண்பர்கள் வெளிநாட்டில இருக்கினம். அவங்கள் எனக்கு என்ன உதவி வேணுமெண்டாலும் செய்வம் எண்டு சொல்லியிருக்கிறாங்கள்..... நான் என்னாலான உதவியை புதியவனுக்காக செய்றன் அம்மா.. அவனுக்காக... அவனுக்காக ஏதாவது செய்ய வேணும் அம்மா...” சுகிர்தனின் வார்த்தைகள் தட்டுத்தடுமாறி வந்து விழுந்தன. வார்த்தைகளை விட வேகமாக கண்ணீர் துளிகள் வந்து விழுந்தன. கனகமும் அவனோடு சேர்ந்து தன் பிள்ளையை நினைத்து அழ ஆரம்பித்தாள். இதன் பின் இருவரும் மீனுவைப்பார்க்கப் போன போது மீனு தூங்கிக்கொண்டிருந்தாள். பூவரசனின் அத்தையோடு கொஞ்சம் மனம் விட்டுப்பேசினான் சுகிர்தன்.

“அம்மா, நான் இப்ப தான் புனர்வாழ்வில இருந்து வந்திருக்கிறன். இப்போதைக்கு எனக்கு வேலை ஒண்டும் இல்ல. ஆனால் எனக்கு போன கிழமை இங்க வந்திட்டு போனதில இருந்து மீனுவின்ர நிலையைப் பார்த்த பிறகு அமைதியா இருக்க முடியேல்ல. புதியவன்... அவன் தான்.... உங்கட பூவரசன்... எனக்கு மீனுவைப்பற்றி நிறைய சொல்லியிருக்கிறான். தன்னுடைய சாவு இவளைப் பாதிக்கும் எண்டு அவன் முதலே அறிஞ்சிருக்கிறான். அதைப்பற்றி அவன் என்னட்ட சொல்லிக் கவலைப் பட்ட நேரத்தில் எல்லாம், நான் தான் அவனுக்கு இப்படி நடக்கும் என்று நம்பேல்ல.. அதனால அதைப்பற்றிக் கவலைப் படாதையெண்டு ஆறுதல் சொல்லுவன்... இப்ப அதுவே உண்மையாகிப்போச்சு... அவனுக்காக, நான் மீனுவைச் சுகமாக்க வேணும்... ஏதாவது முயற்சி செய்வம்..”  என்று நிறுத்தாது பேசியவனை நன்றியோடு நோக்கினாள் சுந்தரி, மீனுவின் தாய்.

அன்றைய தினம் மீனு தூக்கத்தில் இருந்து எழுவதற்கு முன்பாகவே அவளை அமைதியாகப் பார்த்துவிட்டு புறப்பட்டு விட்டான். அன்றிலிருந்து அவன் மேற்கொண்ட முயற்சிகளின் பலன் ஒரு மாதத்துக்குள் எல்லாம் அமைந்து வந்தன. சில நண்பர்கள் அவனுக்கு மனப்பூர்வமாக உதவ முன்வந்தார்கள் அவர்களின் துணையோடு கேரளாவில் ஒரு நல்ல மனநல மருத்துவரை அணுக  முடிவுசெய்தான்.

செய்தியை அறிந்ததும் கனகமும் சுந்தரியும் சம்மதிக்கவில்லை. அவ்வளவு தூரம் போய் எப்படி..... என்ற தயக்கத்தை போக்க நிறைய பேசினான் சுகிர்தன். கடைசியில் சுந்தரி, சரி, முயன்றுதான் பார்ப்போமே என்று பல குழப்பங்களுக்கு மத்தியில் முடிவெடுத்தான்.  ஆனால் சுகிர்தன் பெரிதும் போராட வேண்டியிருந்தது தன்னுடைய பெற்றோருடன் தான்.

“ஆர் எப்படிப்போனால் என்ன... இப்ப எத்தனை பேர் இந்த நிலமைல இருக்கினம் எல்லாருக்குமா உதவி செய்ய போறாய்?” என்று அவனுடைய அப்பா வானுக்கும் பூமிக்கும் துள்ளினார்.

“ஆரும் எண்டால் நான் பேசாமல் இருக்கலாம். ஆனால் அவன் என்ர உயிர் நண்பன் அப்பா. இதை செய்யாட்டில் நான் நிம்மதியா இருக்க மாட்டன். மருத்துவம் செய்யத்தானே உதவப் போறன்.... நானும் அவையோட இந்தியாவுக்குப் போனால் எனக்கும் கொஞ்ச நாளைக்குப் பாதுகாப்பு”

 என்று பாதுகாப்பைக் காரணம் காட்டி ஒருவாறு அவர்களை அமைதிப்படுத்தினான். அவனது அந்தப் பயணம்... புனர்வாழ்வு முகாமில் இருந்து வெளியே வரும் போது இனி என்ன வாழ்க்கை என்று நினைத்ததற்கு மாறாக, தன் வாழ்க்கையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவதற்கானதாக அமைந்தது என்பதை அப்பொழுது அவன் அறிந்திருக்கவில்லை......



தொடரும்......