Friday 28 February 2014

அம்மாவுக்கு பிறந்த நாள்

நீ பிறந்த நாள்
நான் மலர்ந்த நாள்
நான் பிறக்க நீ மலர்ந்தாய்
நீ பிறந்த நாளாகிய இன்று
நான் மலர்கிறேன்
முத்தான இந்நாளில்
முத்தாக நீ மலர்ந்தாய்
சிறிதான என் நெஞ்சில்
தாயெனும் இடம் பிடித்தாய்..

என் அம்மாவிற்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
-அனங்கன்

Thursday 13 February 2014

வாடீ என் தோழி....

வாடி என் தோழி நட்பின்
வாசனை மலரடி நீயே
வாடிப் போகிறேன் மேலும் -உன்
வாதைகள் கண்டுமே நானும்
தோளில் சாயவும் நீயடி-என்னை
தோளில் தாங்கவும் நீயடி
தாள்கள் தளர்ந்திடும் வேளையில்- என்
தோள்கள் வருடவும் நீயடி..
எங்கு நீ சென்றாலும் தோழி
உன்னோடு நானிருப்பேன் நாடி
தூரப் போகாதே வாடி-என்னை
துயரத்தில் தள்ளாதே போடி...

பொம்மைச் சண்டையெல்லாம் போச்சு
வெம்மை நெஞ்சில் பரவலாச்சு
பொய்மையில் தொலைந்தவள் நானடி-இனி
புவியினில் வாழ்வெனக்கேதடி.
சொல்லியழ முடியவில்லை - நான்
சொல்லிப் புரியும் ரகமுமில்லை
மெல்லும் வழி தெரியவில்லை
மெல்லாதுமிழத் தோன்றவில்லை
ஊர் உறங்கிப் போனதடி தோழி -என்
உசிர் உறங்க மறுக்குதடி  தோழி
பாவி இவ கொண்ட சொந்தம்  தோழி
பாதியிலே  தவிக்குதடி தோழி...
எத்தனை தான் வந்தாலும்  வாழ்வில்
எந்தன் அன்பு மாறாது தோழி
நட்பு வானில் இன்றுபோல் என்றும்
கைகோர்த்துப் பறந்திடுவோம் வாடி....

Wednesday 5 February 2014

மதங்களின் பிடியில்... 1


“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”
உலகப் பொதுமறை கொடுத்த பெருந்தகையோன், பொய்யாமொழிப் புலவனின் மறைவாக்கியத்தோடு இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கின்றேன். இது என் அறிவுக்குட்பட்ட புரிதலுடனான கட்டுரையே. எனவே, உள்ளே பயணிக்குமுன் வாசகர்களுக்கு என்னைப் பற்றி சில விடயங்களைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
நான் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தவள். எனினும் கத்தோலிக்கம் என்ற பாரம்பரியத்தைக் களைந்து, என் நம்பிக்கையின் அடிப்படையிலும், சில கொள்கை அடிப்படையிலும் ‘கிறீஸ்தவள்’ என்ற பொதுப்படையான பெயரோடு வாழ முற்பட்டவள். எது எப்படியோ, அன்றும் இன்றும் என்றும் கிறீஸ்துவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டவள்.
எனினும், மதங்கள் பற்றிய எனது பார்வை முற்றிலும் வேறானது என்பதை இந்தக் கட்டுரை நிதர்சனமாக்கும். ஆகவே எந்த மதத்தவராக இருந்தாலும், இந்தக் கட்டுரையைப் படிக்கும் போது, இங்கே கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள் யாவும் நான் மதங்களுக்கு வெளியே நின்று, ஒரு பார்வையாளராக, அல்லது அவதானிப்பாளராகவே நின்று கூறியிருக்கிறேன் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டுகிறேன். யாரையும் தாக்கும், புண்படுத்தும் நோக்கத்துடன் எந்தக் கருத்தும் கூறப்படவில்லை. நான் எதிலும் பாண்டித்தியம் பெற்றவள் இல்லை என்பதால் இங்கே கூறப்படும் தவறான கருத்துக்களை சுட்டிக் காட்டுங்கள்.. மதவாதம் தவிர்ந்த ஆரோக்கியமான கருத்துக்கள் மூலம் உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள ஆவலாயிருக்கிறேன்.
கடவுள் பற்றிய எனது புரிதல்….
கடவுள் என்று நினைக்கும் போது என் தந்தை தன்னுடைய ஒரு கலைப் படைப்பு ஒன்றில் சொல்லியிருந்த உதாரணம் தான் என் நினைவில் வருகிறது.
அதாவது, நீரை நாம் எம்முடைய மொழி வழக்குக்கேற்ப தண்ணீர் என்றும், ஜலம், வெள்ளம், வோட்டர் (வாட்டர்), பத்துறு… இப்படி பல பெயர்களில் அழைக்கிறோம். ஆனால் பொருள் ஒன்றுதான். இது என் தந்தையின் கலைப்படைப்பில் வெளியான உதாரணம் தான். இது என் இளம் வயதில் மனதைத் தொட்ட ஒரு உதாரணமாக இருந்தது. இன்னும் என் சிந்தனை இதனையே கொஞ்சம் அதிகமாக விரிவுபடுத்தி தனக்கான வியாக்கியானங்களைத் தொகுத்தெடுத்துக் கொண்டது. அதையே என் புரிதல் என்கிறேன். அதையும் நோக்கலாம்.
முழுமுதற்பொருளான இறைவனை முழுமையாகப் புரியவைப்பதென்பது முடியாதகாரியம். ஏனென்றால் இறைவன் கற்பிக்கப்பட வேண்டியவர் அல்ல, உணரப்பட வேண்டியவர். ஆனாலும் ஒரு சிறு பிள்ளைக்குச் சொல்வது போல் புரியவைக்க இந்த நீரை விடச் சிறந்த உதாரணம் இல்லை என்றே நினைக்கிறேன். நீரைப் பல்வேறு பெயர்களில் அழைப்பது போலவே, அந்த நீரை உங்கள் வசதிக்கேற்றபடி விதவிதமான வடிவங்களையுடைய கண்ணாடிக் குவளைகளில் ஊற்றிப் பாருங்கள். அது அந்தப் பாத்திரத்தின் வடிவத்தை ஏற்றுக் கொள்ளும். ஆனாலும் அது இறுதி வரைக்கும் நீர்தான்.
கடவுள் அகில உலகுக்கும், உலகத்தின் எல்லை தாண்டிய அனைத்துக்கும் பொதுவான ஒரு மாபெரும் சக்தி. அந்த சக்தியைப் புரிந்து கொண்டு, அதன் வழியில் அதை நோக்கி பயணிப்பவனால், அந்த சக்தியைத் தன்வசப்படுத்த முடியும். அதனால் தான் எதனாலும் கட்டுப்படுத்த முடியாத இறைவனை மனிதன் தன் அன்பினால் கட்டுப்படுத்த முடியும் என்று எல்லா மதங்களும் ஏற்றுக் கொள்கின்றன. அதாவது, மனிதன் இறைவனை அன்பு செய்கிறான் எனில் இறைவனுக்கேற்ற வழி எதுவென நம்புகிறானோ அந்த வழியில் தன் கவனத்தைக் குவிப்பான். இதனால் அவனுடைய மாபெரும் இறையன்பு வெளிப்படுகிறது மட்டுமன்றி இறைவனின் சக்தி (அருள்) அவனுக்கு சாதகமாக்கப்படுகிறது. 
அறிவியலாளர்கள் எல்லோரும் உலகம் இயங்குவது அணுக்களால், அதற்கும் கடவுளுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்று அடித்துக் கூறும் அதே வேளையில் எனக்கு அடிக்கடி ஒரு கேள்வி எழுகிறது. அப்படியானால் அந்த அணுக்கள் எப்படித் தோன்றின? அவை எப்படி இயங்குகின்றன? அல்லது எப்படி இயக்கப்படுகின்றன? அதே போன்று, எத்தனையோ சாதனை படைத்த அறிவியலால், ஒரு குழந்தையின் பிறப்பையோ, அல்லது ஒருவனின் இறப்பையோ முற்கூட்டியே துல்லியமாக நேரம் குறிக்க ஏன் முடியவில்லை? அப்படியானால் அறிவியலுக்கும் அப்பாற்பட்ட ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறதே… இத்தகைய என் கேள்விகளுடனான தேடலுக்கு சிறியதொரு மனச்சாந்தி கொடுப்பது போல அங்கும் இங்குமாய் எதேச்சையாய் சிறு தகவல் கிடைத்தது. அது தான் ஆராய்ச்சியின் வெளிப்பாடாய் அறிவியலாளர்கள் கண்டு கொண்ட ‘கடவுள் துகள்’ (ஹிக்ஸ் போஸான்). இதுவே அணுக்களின் மூலம் என்கிறார்கள். இதைக் கண்டுபிடித்திருக்கிறார்களே தவிர இன்னும் காணவே முடியவில்லையாம். அதனால் தான் அறிவியலாளர்களே இதற்கு கடவுள் துகள் என்று பெயரிட்டு விட்டார்கள் என்று நினைக்கிறேன். இது அறிவியல் சார்ந்ததா அல்லது கடவுள் சார்ந்ததா என்ற தெளிவான முடிவை அறிவியலாளர்கள் கண்டுபிடித்து சாதாரண பாமரமக்களுக்கும் புரியும் வண்ணம் நிருபனமாக்கும் வரை ஆத்திகர்களின் நம்பிக்கையில் கடவுள் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.
கடவுளுக்கெதிரான தீய சக்தி
இன்னொரு விதத்தில் சாதாரண வார்த்தையில் சொல்வதானால் பேய், பிசாசு, சைத்தான் அல்லது சாத்தான் இப்படிப் பல பெயர்களில் உலாவும் ஒரு சக்தி… நவீனகாலத்தில் பரபரப்பான முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், இன்று பலர் மத்தியில் இப்படி ஒன்று இருக்கிறதா என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது. சில வாரங்களுக்கு முதல் தமிழகத்தின் விஜய் தொலைக்காட்சி நிகழ்வான ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் இதுபற்றி ஒரு அலசலும் கூட நடைபெற்றது. ஆனால் இருக்கிறது என்பதே என்னுடைய எண்ணம். எந்த ஒரு தாக்கத்திற்கும் எதிர்த்தாக்கம் இருக்கிறது என்று விஞ்ஞானம் சொல்கிறது. அது போலவே கடவுள் என்ற மாபெரும் சக்திக்கு எதிராக ஒரு தீய சக்தியும் இருக்கிறது என்றே நம்புகிறேன்.  ஆனால் எப்படி? எங்கே?
பொதுவாக கடவுள் எங்கும் வியாபித்திருப்பர் என்பது தான் ஆத்திகர்களின் நம்பிக்கை. அப்படியானால் எதிரான சக்தியும் கடவுள் இருக்கும் இடங்களில் எல்லாம் நுழைய முற்பட்டுக் கொண்டிருக்கும். ஆனால் கடவுள் வாழும் இல்லம் எமது உள்ளமே என்று அநேகமானவர்கள் கூறுகிறார்கள். அதே உள்ளத்தில் தீயசக்திகளும் இருக்கின்றன. எப்படி கடவுளை நோக்கிப் பயணித்து கடவுளின் சக்தியை/அருளைப் பெற முடியுமோ, அது போலவே இந்த தீய சக்தியை நோக்கிப் பயணிப்பவர்கள் அதன் தீய எண்ணங்களுக்கான சக்தியைப் பெற்றுக் கொள்கிறார்கள் என்பது எனது நம்பிக்கை.
ஆன்மீகத்தைக் கடந்து சிந்தித்தால், இதைத்தான் ஒரு சாரார் உள்ளத்தில் இருக்கும் நல்லெண்ணம், மனச்சாட்சி, நேர்மறை (பொஸிட்டிவ்) எண்ணம் என்றும் அதற்கெதிரான சக்தியை தீய எண்ணம், தீய மனச்சாட்சி, எதிர்மறை எண்ணங்கள் (நெகட்டிவ்) என்று வகைப்படுத்துகிறார்கள் என்று  நினைக்கிறேன்.
எது எப்படியாயினும் கடவுள் என்பது தூய, நல்ல சக்தி என்றும் பேய்,பிசாசு போன்ற சொற்களால் குறிக்கப்படுபவை தீய, கெட்ட சக்தி என்றும், இந்த இரண்டில் ஒன்று இருக்கும் இடத்தில் அடுத்த சக்திக்கு இடம் இல்லை என்றும் நான் நம்புகிறேன். இதையே ஆத்திகர்கள் பலரும் நம்புகிறார்கள்.

மதங்களின் பிடியில் கடவுள்.....


இது என்னுடைய சிந்தனையோடு கலந்த சிறு கற்பனையே.. இந்தக் கற்பனை மூலம் நான் கடவுளை மதங்களோடு இணைத்துப்பார்க்க முயன்றிருக்கிறேன்.
ஆரம்பத்தில் கடவுளை இயற்கை மூலம் உணர்ந்துகொண்ட மனிதன் இயற்கையை வழிபட்டான். அதாவது இயற்கையின் சீற்றங்களைக் கண்டு பயந்தும், இயற்கையால் மனிதனுக்கு கிடைக்கும் பயன்களைக் கண்டு நெகிழ்ந்தும் அங்கே தமக்கு மேலான சக்தி இருக்கிறதென்று உணர்ந்ததால் அந்த சக்தியை துதிக்க ஆரம்பித்திருப்பான் என்பது என் சிந்தனை. மெல்ல மெல்ல அந்தக் கடவுளுக்கு வடிவங்கள் கொடுக்க ஆரம்பித்து, பின்னர் தமக்கு வசதியாகப் பெயர்களையும் சூட்டியிருப்பான் போலும்.
எது எப்படியோ, ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த பெயர்களையும் உருவங்களையும் கடவுளுக்குக் கொடுத்து, கடவுள் பன்மைப் பொருளாகி விட்டார் என்றே நான் நினைக்கிறேன். ஒருவேளை மனிதன் நினைப்பது போல் கடவுளர்கள் பலராக இருந்தால், அவர்கள் எல்லோரும் இந்த மனிதனின் வேண்டுதல்களுக்கு தலையசைத்தால், அந்த மாபெரும் சக்திகளே ஒன்றுக்கொன்று சண்டை போட்டு இந்தப் பிரபஞ்சமே அதிர்ந்திருக்கும். ஆனால் கடவுள் ஒருவராக இருப்பதால் இப்பொழுது இந்த மனிதனுக்கு எப்படிப் புரிய வைப்பது என்று தெரியாமல் தலையில் தான் கை வைத்துக் கொண்டிருப்பார். அதனால் தான் காலத்துக்குக் காலம் மக்களிடையே இருந்து சில வழிகாட்டிகளை எழுப்பினார். அவர்களை சிலர் மகான்கள் என்றும், சிலர் தூதர்கள் என்றும் இன்னும் சிலர் தீர்க்கதரிசிகள் என்றும் தேவமனிதர்கள் என்றும் சொல்கிறார்கள். இவர்கள் தம்முடைய வார்த்தைகளால் மனிதனுக்கு இறைவனையும், இறைவனுக்குரிய பண்புகளையும், கூடவே மனிதன் இப்படி வாழ்வதைத்தான் இறைவன் விரும்புகிறார் என்பதையும் சொன்னார்கள். அதை எல்லாம் ஒரு காதில் எடுத்து மறுகாது வழியாக வெளியே விடுபவன் மனிதன் என்பதால் அவர்கள் தமது வாழ்க்கையில் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள். ஆனால் அப்போதும் கூட அதைப் புரிந்து கொள்ளாத மனிதன் அவர்களையும் கடவுள் ஆக்கிவிட்டான். ஆனால் இது கூட மனித இயல்பு தான். ஏனெனில் என்னால் இயலாத ஒரு காரியத்தை இன்னொருவர் செய்து விட்டால் அவர்களை உயர்ந்த இடத்தில் வைப்பது இயல்பே. மனிதனுக்கு கடவுள் தான் உயர்ந்த இடத்தில் இருப்பவர். அதனால் அந்த இடத்தில் இந்தப் புனிதர்களையும் வைத்து விட்டான்.
இவர்களால் வழங்கப்பட்ட வார்த்தைகள் அந்தந்தக் காலத்துக்கேற்ற போதனைகளாகவே இருந்தன. அதேவேளை சில விடயங்கள் எக்காலத்துக்கும் பொருந்துவனவாக அமைந்துள்ளன. அவை நீண்ட காலமாக பேணப்பட்டு வருவதால் இந்தக் காலத்தில் அந்தப் போதனைகளைப் பலரும் தாம் புரிந்து கொள்கின்ற விதத்தில், இந்தக் காலத்துக்கும் பொருந்தும் வகையில் சேர்த்தெடுத்துப் போதித்து வருகிறார்கள். தம்முடைய நம்பிக்கைகளையும் விருப்பங்களையும் கொள்கைகளையும் சேர்த்தெடுத்து அதை ஏற்றுக் கொள்ளும் ஒவ்வொருவரும் ஒரு குழுவாக இணைந்து செயற்பட ஆரம்பிக்கிறார்கள். அது ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்தியாக உருவெடுத்து ‘மதம்’ என்ற பெயரோடு உலவ ஆரம்பிக்கிறது. கடவுள் இப்பொழுது மதங்களின் பிடிக்குள் சிக்கிக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். மதங்கள் இன்றும் உருவாகிக் கொண்டு தான் இருக்கின்றன. ஒவ்வொரு குழுக்களாக இணைந்து கடவுளைப் பற்றிச் சிந்திக்கவும், கடவுளுக்கேற்ற பண்புகளோடு வாழ முனைவதும் நல்ல விடயம் தான். தவறொன்றும் இல்லை. மனிதன் அப்படி வாழ்வது தானே ஆரோக்கியமும். அப்படியானால் எங்கே முரண்பாடுகள் தோன்றுகிறன?
மீண்டும் மதங்களுக்குள் பயணிப்போம்
அடுத்த தொடரில்