Showing posts with label பிரிவு. Show all posts
Showing posts with label பிரிவு. Show all posts

Sunday, 10 March 2013

ஈழத்து அன்னையர்....



இன்று அன்னையர் தினம்...
உலகெங்கும் அன்னையர் மகிழும் நாள்..
உதரத்தில் சுமந்தவரை போற்றும் நாள்...
உத்தமத் தாய்களின் நாளிதனில்
உண்மை மகிழ்வைத் தொலைத்துவிட்டு
உலகுக்காய் தினம் சிரிக்கும்- தாய்
உள்ளங்களை நினைக்கின்றேன்....தாம்
ஈன்ற பிள்ளைகளின் நிலையறியா
ஈழத்து அன்னையரை நினைக்கின்றேன்..

வருவேன் என்று சென்றவன் வரவில்லை...
யார் கொண்டு சென்றாரோ?....
பருவ மங்கையாய் பார்த்துப் பார்த்து வளர்க்க
பாதகர்கள் சீரழித்தாரே என் பாசக்கிளியை......
கைது செய்து கொண்டு சென்றார்
காலங்கள் கடந்தும் விடுதலை இல்லை..
குருதி வெளியேற, தண்ணீர் கேட்டு
கதறித் துடித்து என் மடியில் மரித்தானே.....
கண்மூடித் திறக்கும் முன்னே என்
கண்முன்னே சிதறிச் செத்தானே ....
களத்திலே வீரனாகி மடிந்தான்.. அவன்
கனவுகள் மெய்ப்படுமா இல்லையா.. – இன்னும்
ஓடித் திரிந்தவன் அங்கமிழந்து
ஓய்ந்து போனானே...

இப்படி
ஒரு போதும் ஆறாத வடுக்களோடு
இன்னும் தன் பிள்ளைகளை நினைத்தேங்கும்
ஈழத்துத் தாய்மாரை நினைக்கின்றேன்....
இவர்களும் மகிழும் ஒரு அன்னையர் தினம்
இனியும் வருமா? எப்போது?

Tuesday, 29 January 2013

நீ வரவில்லை...











இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

Saturday, 29 December 2012

ஒரு மௌன யுத்தம்...

பேச்சடங்கிப் பலயுகம் போல் தோன்றுது...

பேசாத வார்த்தைகளை எனக்குள்ளே பேசிப் பேசி..
நாசி வரண்டு உன் சுவாசம் தேடுது...
ஓசையற்ற என் விசும்பலூடே
ஓராயிரம் முறை உன் சட்டை பிடித்து..
ஓங்கி உலுப்பிக் குலைகிறேன்...
அது கூடக் கற்பனையில் தான்...
உற்றவனைக் கூட தொட்டுணர முடியா தூரம்...
கற்பனை வாழ்க்கை தான் நான்
கண்ட மிச்சமானதோ...

பொசுக்குப் பொசுக்கெனக் கோபம் வரும்
பொசுங்கிவிடும் அதுவாகவே சில நிமிடத்தில்...
ஆண்மை குடிகொள்ளும் உன்
அடர்ந்த மீசைக்குள்
ஆணவத்தை.. தேடித் தேடி ...
அலுத்துப் போனேன்...
உன் மோகன விழிகளுக்குள்
மிதந்து கொண்டிருக்கும் காதலை
மூடி மறைக்கும் ஊடல்
என்னை விம்மி வெதும்ப வைக்கும்...
திருவிழாவில் தொலைந்து போய்
திக்கி நிற்கும் குழந்தை போல..
ஆனாலும்... என் வரட்டுப் பிடிவாதத்தால்
தண்டனையும் எனக்கே தான்...
என் மௌனம் உனக்குள் மோதியிருக்கும்...
ஏனென்றால்... நாம் பேசியதை விட
அகராதியற்ற நம்
மௌன மொழிகளே நமக்குள் அதிகம்....
ஊடறுத்துப் பாயும் உன்
ஊமைப் பார்வைக்குத் தான்
எத்தனை சக்தி....
கூடறுத்துக் குலையறுத்து என்
உயிர் பறந்து தவிக்கிறதே...
போதும் உன் பொய்க் கோபம்...
போட்டுடைத்து விடு... எனக்குப்
போராட சக்தியில்லை.. உன்னோடு அல்ல
உன் மௌன யுத்தத்தில்... 



இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

Sunday, 16 December 2012

உலகம் தானே.. அழிந்து போகட்டும் விட்டு விடு

உலகம் அழியப் போகிறதாம்..
ஊரெல்லாம் பேச்சு.. அன்பே
உனக்கு ஒன்றைச் சொல்லவா..
உலகம் தானே.. அழிந்து போகட்டும் விட்டு விடு
எமக்குத் தான் உருவங்கள் இல்லையே
நான் உனக்குள்ளும் நீ எனக்குள்ளும்
ஆத்மார்த்தமாக ஆழ்ந்த பின்
ஆதாரமற்ற இந்த உலகம் எதற்கு...
உடல்கள் பிரிந்தும் உணார்வுகள் சங்கமிப்பது
உனக்கும் எனக்கும் தானே தெரியும்.. அதை
அறிய முடியாத இந்த உலகம் எதற்கு?
இது இருந்தாலும் அழிந்தாலும்
நமக்குள்ளே உறைந்திருக்கும் அந்த
உருத்தெரியா காதல் அழிவதில்லையே...
அப்படியே அழிந்திட்டாலும்..
பால்வெளியின் பரந்த வெளியில்..
அந்தரத்தில் எங்கோ என்
அத்மா அலைந்து கொண்டிருக்கும் போது
உன்னை அடையாளம் காணாமல் போகலாம்..
கண்டாலும்.. நீண்ட இடைவெளியின் பின்
உன்னைக் கட்டித்தழுவ.. இல்லையில்லை
எப்போது நீதானே முந்திக் கொள்வாய்..
என்னை அந்தப் பாழாய்போன வெட்கம்
முந்திகொள்ளுமே.. அந்தக் கட்டியணைத்தல்கள்
சரீரமற்ற நமக்குள் சாத்தியமற்றுப் போகலாம்..
ஆனாலும் உன்
கறுத்த உதடுகளின் மெல்லிய ஒற்றடங்களின்
குளிர்ச்சியை பாதுகாக்கும் சருமம் தொலைந்திருந்தாலும்
அதன் நினைவுகள் அந்த அவாந்தர வெளியிலே
என்னை இன்னமும் ஆனந்தமாக மிதக்க வைக்குமே...
நம் குழந்தைகளுக்கு நடுவே
நானும் ஒரு குழந்தையாய்... உன் மடியில் சாய
அடம்பிடித்த போது.. அன்பாக அணைத்துக் கொண்டாயே
அந்த அணைப்பின் சூடு கூட என்னை சுழன்று
பறக்கவைக்கும் என்பதை நீ மட்டும் அறிவாய்..
அந்த நினைவுகளை எனக்குள் பொத்தி வைக்கிறேன்..
உலகம் முடியும் போதும் அது மட்டுமே
என் அரும்பெரும் பொக்கிசங்கள்...
என்னதான் யார் சொன்னாலும்
உனக்கென்றே சில உணர்வுகளைப் பூட்டி வைக்கிறேன்
அது உனக்கானது மட்டும்.. உலகம் முடிவதற்குள்
இணைந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில்.. ஆனாலும்
உனக்குள் நானும் எனக்குள் நீயும்
உருவின்றி வாழும் போது...
உலகம் தானே... அழிந்து போகட்டும் விட்டுவிடு..



இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

Friday, 7 December 2012

சிங்கள மக்களைத் தமிழ் மக்கள் எதிரியாக நினைப்பது சரியா?


சிங்கள மக்களைத் தமிழ் மக்கள் எதிரியாக நினைப்பது சரியா?
இந்தக்கேள்விக்கு என் தமிழகத்து நண்பர்கள் சிலருடனும் எனக்கு அடிக்கடி தர்க்கம் ஏற்பட்டுள்ளது.. இன்னும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது... அதனால் குறிப்பாக தமிழக நண்பர்களுக்கு இதை கூற விழைகிறேன்.
மக்கள் எப்பொழுதும் மக்கள் தான். அவர்களைத் தலைமை தாங்கும் அரசாங்கத்தைக்கொண்டு அல்லது சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக நாம் எண்ணிக்கொள்ளும் சில குழுக்களைக்கொண்டும் அந்த மக்களைக் கணிப்பது முற்றிலும் தவறாகிறது. கால காலமாக நாம் பட்டு வந்த துன்பங்களுக்கெல்லாம் காரணம் சிங்கள பேரினவாத அரசாங்கமே தவிர மக்கள் அல்ல. எல்லா இனத்தவர்களிடையேயும் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று இருக்கத்தான் செய்கிறார்கள். அது தமிழர்களிடத்திலும் கூட இருக்கிறது மறுக்க முடியாத உண்மை. இப்படியிருக்க சில துவேசம் கொண்ட சிங்களக் குழுக்கள் பாமர மக்களைத் தூண்டி விடுகின்றனவாக இருக்கின்றன.
ஒருகாலமும் விடுதலைப்புலிகளைக் காணாத சில சிங்கள மக்கள், ஒப்பந்த காலப்பகுதியில் அவர்களைக் காண நேர்ந்த போது பெரும் ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். ஏனென்றால் அவர்கள் பயங்கரவாதிகள் என்று விடுதலைப்புலிகளைப்பற்றிய சிங்கள அரசினதும் பேரினவாதக் குழுக்களினதும் பிரச்சாரங்களை கேட்டுப்பழகிய சிங்கள மக்கள், விடுதலைப் புலிகள் சாதாரண மனிதர்களைப் போன்று கூட இருக்க மாட்டார்கள், காட்டுவாசிகளைப்போலத் தான் இருப்பார்கள் எனத் தாமாகவே அவர்களைப்பற்றிய ஒரு கற்பனையை வளர்த்துக் கொண்டவர்கள் (கிராமப்புறத்து பாமர மக்கள்) நேரில் கண்டபோது... அவர்களின் பண்பாடும், கம்பீரமும், நற்பழக்க வழக்கமும் திகைக்க வைத்திருந்தது. இப்படித்தான் மக்கள்.... இன்னும் கூட பிரச்சாரங்களையும், மகாவம்சத்தின் கட்டுக்கதைகளையும் நம்பிக்கொண்டு தமிழர்களையே பயங்கரவாதிகள் என எண்ணும் மக்கள் கூட்டம் இருக்கவே செய்கிறார்கள். அறியாமையினால் இந்த அப்பாவி மக்கள் செய்யும் இதே தவறை நாம் செய்யலாமா? 
அவர்களுக்குப் புரிய வைப்பது நமது கடமை... அதை செய்ய முடியவில்லை என்றால் அவர்களை எதிரிகளாக எண்ணாமல், நாமும் அதே துவேச மனப்பான்மையுடன் நடந்து கொள்ளாமல் ஒதுங்கிக் கொள்வது நல்லது. 
சிங்கள மக்களிடையேயும் தமிழ் மக்களின் போராட்டத்தை ஆதரித்தவர்களும் உயிர்த்தியாகம் செய்தவர்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இதுவே நமது முஸ்லிம் சகோதரர்களும் கூட போராளிகளாக இருந்து மாவீரர்களாகியிருக்கின்றனர் என்பதை நாம் நெஞ்சில் இருத்திக் கொள்ள வேண்டும். அதே வேளை, கூட இருந்து ஒரே கோப்பையில் உண்டு குடித்துவிட்டு கோடரிக்காம்புகளான தமிழர்கள் எமது வரலாற்றில் அதிகம். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் கூட `எமது போராட்டம் அரசுக்கெதிரான போராட்டமேயன்றி, சிங்கள மக்களுக்கெதிரான போராட்டம் அல்ல என்று தெளிவாகக் கூறியிருக்கிறார். அதையாவது நாம் ஏற்றுக்கொள்ள வேண்டாமா?
நீண்ட காலமாகப் போரினால் பாதிக்கப்பட்ட மனநிலையில், இழப்புகளும் கொடூரங்களும் எமது கோபத்தை ஒரு திசை நோக்கிச் சாய்ப்பது இயல்பு என்பதால், ஈழத் தமிழர்கள் சிங்கள மக்களை எதிரிகளாகச் சாடுவதைக்கூட ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் அது வலியின் வெளிப்பாடு. ஆனால் அது கூட காலப் போக்கில் மாறிப்போக வேண்டும். தமிழர்களிடம் வீரம், மானம் மட்டுமல்ல மனித நேயமும் அவர்களிடம் தான் இருக்கிறது என்று இந்த உலகிற்குக் காட்ட வேண்டும் என்பதே எனது அவா. ஆனால் தமிழகத்தில் இருந்தும் தமிழ் மக்கள் சிங்கள மக்களைப் பெரும் எதிரிகளாகப் பார்ப்பதும் விமர்சிப்பதும் மிகவும் வருத்தத்திற்குரியது. அரசியல்வாதிகள் தமது அரசியல் லாபங்களுக்காக மக்களை உசுப்பேத்தி விடுவதும், மக்கள் உணர்ச்சி வேகத்துக்குட்பட்டவர்களாக என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் வாய்க்கு வந்தபடி கொட்டித் தீர்க்கிறார்கள்.
மீனவர்களின் பிரச்சனையை இந்த இடத்தில் சிலர் முணுமுணுப்பது புரிகிறது. இது தொழில் ரீதியான பிணக்கு. இன்று இதே இடத்தில் இலங்கைத் தமிழன் ஆட்சி நடத்தினால் இதே மீனவர்களின் பிரச்சனை இலங்கைத் தமிழ் மீனவர்களுக்கும், இந்தியத்தமிழ் மீனவர்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். இலங்கையிலேயே கூட இத்தகைய தொழில் ரீதியான பிணக்குகள் இரு வேறு கிராமங்களுக்குள்ளேயே அப்பப்போ நடக்குமே... 
இனம் என்பதைத் தாண்டி நாம் எல்லோரும் மனிதர்கள் என்ற மன நிலையை ஏன் குழிதோண்டிப் புதைத்து விடுகிறோம்? மனிதர்களை மனிதர்களாக மதிக்க மறுக்கிறோம்.. சிங்கள அரசாங்கம் செய்வதற்கெல்லாம் வாய் மூடி மௌனித்திருப்பதால் சிங்கள அப்பாவிப் பொது மக்களும் தமிழர்களுக்கு எதிரிகள் என்றால், தாய்த் தமிழக நெஞ்சங்களும் ஒரு காலப்பகுதியில் இப்படி மௌனித்து இருந்தார்களே அதை மறந்து விடலாமா?. 
`வீசும் காற்றே தூது செல்லு தமிழ் நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு
...
எத்தனை எத்தனை இங்கு நடந்திட எங்களின் சோதரர் தூக்கமெல்லோ..`
என்று உங்களை நோக்கியும் நாங்கள் அழுது புலம்பினோமே... அப்பொழுது நீங்கள் விழித்துக் கொள்ளவில்லை... எல்லாம் முடிந்த பின்னர் விழித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும் எங்கள் சகோதரர்களாக நாங்கள் ஏற்றுக்கொள்கிறோமே.. அது தொப்புள் கொடி உறவு என்கிறீர்களா? அப்படியானால், அந்த நேரத்தில் தொப்புள் கொடி உறவுகளாலேயெ எமக்கு கைகொடுக்க முடியவில்லை என்றால்... எதிர்த்து நிற்கும் அரசிற்கு கீழ்ப்பட்ட இந்த சிங்களப் பொது மக்கள் என்ன செய்வார்கள். அரசியல்வாதிகளால் இவர்கள் அறியாமைக்குள் வழிநடத்தப்படுகிறார்கள் என்பதை எப்பொழுது நாம் புரிந்து கொள்ளப்படுகிறோம்? அதே நிலையில் தான் இன்று சிங்கள மக்களும் இருக்கிறார்கள். அவர்களும் என்றோ ஒரு நாள் விழித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு முயற்சி செய்வோம்.
மனித நேயத்துடன் நடப்போம்... மனிதர்களை இனம், மதம் என்ற கண்ணாடிகளைக் கழற்றி விட்டு... மனிதர்களாகவே பார்ப்போம்... மனிதர்களாகவே நடப்போம்....


இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

Wednesday, 4 April 2012

இரவுச் சிறையினிலே...

நிசப்த விலங்குகள்
நினைவுகளைச் சிறையிடும்
காரிருள் நெஞ்சுக்குள்
கடூரமாய்த் துளையிடும்...
பிரிவும் துயரும் இதயத்தைப்
பிரித்துப் பிரித்து மேயும்
தாரையாய் விழிநீர் சொரிந்து
தலையணை தெப்பமாகும்
தயம் விரும்பும் சிறையிருக்க..
விழிகள் விரும்பும் விடுதலையை..
நீண்டுவரும் பரிதிக் கரங்கள்..
நிரந்தரமற்ற தீர்வுடனே..

Thursday, 10 February 2011

எப்போது முடிவுறும்

பச்சரிசிப் பல்லிரண்டு எட்டிப் பார்க்கயிலே‍ மகளே
பக்கமிருந்து அதை பார்த்து மகிழ‌வில்லை
எட்டி அடியெடுத்து வைக்கயிலே மகளே உன்
குட்டிக் க்ரம் பிடித்து தாங்கவில்லை
சுட்டித்தனம் பார்க்கத் தவிக்குதடி மனது உன்
பட்டுக்கன்னமதில் மெல்ல முத்தமிட‌த் துடிக்குதடி

ஓடிவந்து மடி வீழ்ந்து ஏறி மிதித்து உதைந்து
என் பெரிய மகள் விளையாட‌
அணைத்து முத்தமிட்டு என் ஆசை தீர்ப்பேனே
என் வயிறு தலையணை போல்
எப்போதும் இருக்குதெண்டு செல்லமாய் குத்தி
மெல்ல வயிற்றில் தலை சாய்த்து
இடுப்பை வளைத்து அணைப்பான் என் மகன்

வாசலையே பார்த்திருந்து வேலைவிட்டு வந்தவுடன்
வேணுமென்றே கோபம் கொண்டு
விளையாட்டாய் சண்டை போட்டு
காதலுடன் ஊடலுமாய்
கணவனோடு வாழ்ந்தேனே

எப்படிப் பிரிந்து வந்தேன்.. ஏனிந்த பிரிவுத்துயர்
எப்போது முடிவுறும் என் ஏக்கமும் வேதனையும்
இதற்கு மேல் முடியாது இறைவா என்
இதயத்திற்கு சக்தி கொடு...

Thursday, 5 November 2009

இம்சை

கணவனைப் பிரிந்தேன் என்று
கண்ணீர் மல்கி நின்றாய்
துணைக்கு வந்த என்னைத்
துணைவனாய் வரிந்து கொண்டாய்
காந்த விழிகளாலே என்னைக்
கவர்ந்து லீலை செய்தாய்
முதன் முதல் உனக்குள்ளே
மோகத்தை வளர்த்து விட்டாய்
சங்கீதமாய் என்னுள்ளே
சஞ்சாரம் செய்து நின்றாய்
வனப்புடைய உன் மகனிற்கு
வளர்ப்புத் தந்தையாய்
வனைந்து கொண்டாய்
தீராத மோக மயக்கத்தில்
கிறங்கிப் போய் கிடந்த போது
தீர்மானமாய் சொல்லிச் சென்றாய்
திரும்பி வருவேனென்று-இன்று

தொ(ல்)லைபேசியில் உன்குரல்..
குழந்தையின் நலனுக்காய்
கணவனிடம் போகின்றேன்
இனி என்னை இம்சிக்காதே
இன்னொரு வழியைப் பார் என்கிறாய்
பெண்ணெ... இம்சையைத் தந்தது
நானா... நீயா...?
மெல்லவும் முடியாது உமிழவும் முடியாது
தொடைக்குளிக்குள்ளே துயரப் பந்தை
தந்து சென்றது நானா.. நீயா...??