Saturday 28 September 2013

அவள் அப்படித்தான் – தொடர் 2



ஆவ்வ்வ்... மச்சான் டேய்.... மழை தொடங்கிட்டுது.. கொஞ்சம் வேகமா ஓடடா...பின்னாலிருந்தவனின் குரலைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அவன் அந்தக் குளிர்ந்த சாரலை அனுபவித்துக் கொண்டிருந்தான்.
 “டேய்.......
என்று மீண்டும் அதட்டியவனைப் பார்த்து நக்கலாகச் சிரித்தான்.
 மச்சான் நீ என்ன உப்புக் கட்டியோ சக்கரைக் கட்டியோ??? கரைய மாட்டாய் கொஞ்சம் இரு... இயற்கையை ரசிக்க விடு...
என்ற படியே இரு மருங்கிலும் காற்றின் வேகத்துக்கேற்ப அலையலையாக அசைந்துகொண்டிருந்த கடல்நீரைப் பார்த்தான் சுகிர்தன்.
ஊ.. என்ற காற்றின் அட்டகாசத்தையும் மழை இரைச்சலையும் பொருட்படுத்தாது சுகிர்தனையும் அவன் நண்பன் புதியவனையும் ஏற்றிக் கொண்டு வட்டுவாகல் பாலத்தின் மேல் ஊர்ந்து கொண்டிருந்தது அந்த ஸ்ப்ளெண்டர்ரக மோட்டார்வண்டி. அவர்கள் இருவரும் சந்தித்தது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் தான். ஆனாலும் முன்ஜென்மத்து தொடரோ என்று ஆச்சரியப்படும் வகையில் அவர்களிடம் இருந்த ஒற்றுமை எல்லோரையும் வியக்க வைத்தது. பார்ப்பவர்கள் இரட்டையர்கள் என்றோ அண்ணன் தம்பி என்றோ எண்ணும்படியான முக ஒற்றுமை அவர்களிடையே இருந்ததுவும் கடவுளின் திருவிளையாடல்களில் ஒன்று போலும். நண்பர்கள் இருவருமே மிகுந்த திறமைசாலிகள். ஆனால் புதியவன் மிகவும் அமைதியான சுபாவம். சுகிர்தன் அதற்கு எதிர்மாறானவன். எப்போதும் புதியவனைச் சீண்டிக்கொண்டே இருப்பான்.
மச்சான், கனநாளா உன்னட்ட ஒண்டு கேட்க வேணும் எண்டு நினைச்சனான்...
வழக்கம் போலவே அமைதியான புதியவனின் குரல் கூடவே தயக்கத்தையும் சேர்த்துக் கொண்டு வெளிவந்தது.
என்ன?........”
ஆச்சரியத்தோடு மோட்டார்வண்டியின் கண்ணாடியில் நண்பனின் முகத்தை பார்த்தான் சுகிர்தன்.
இரண்டு பக்கமும் கடல் நீரின் மேல், காற்றின் வேகத்தினால் ஏற்பட்ட மெல்லிய அலைகளின் அசைவைப் பார்த்துக் கொண்டே வந்தவன் சுகிர்தன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்து முறுவலித்தான்.
மச்சான், உனக்காக யாரும் வீட்டில வெயிட் பண்ணுகினமோ
“எனக்காக ஆர் வெயிட் பண்ணப் போகினம்… என்னடா.. விளங்கிற மாதிரிக் கேளன்...சுகிர்தனின் குழப்பமான குரலைப் பார்த்து சிரித்தான் புதியவன்.
இல்லடா...... பழைய காதல் கீதல் எண்டு...
என்று இழுத்தவனைப் பார்த்துச் சிரித்தான் சுகிர்தன்.
இன்னும் இந்த மூஞ்சி அதுக்குத் தகுதியாகேலடா... அது சரி திடீரென என்ன அந்தக் கேள்வி... உனக்கு ஏதும்.??”
என்றபடி மீண்டும் கண்ணாடியில் புதியவனைப் பார்க்க, அவனது பார்வையைத் தவிர்த்துவிட்டு இரண்டு மருங்கிலும் எதிர்த்திசை நோக்கி ஓடிக் கொண்டிருந்த காட்டு மரங்களை நோக்கினான் புதியவன். இன்று தான் இந்த விடயம் பற்றி நண்பனிடம் பேச அவனுக்கு போதிய அவகாசம் கிடைத்திருக்கிறது.
என்ன சத்தத்தைக் காணேல்ல...என்றவனிடம்
ம்... இருக்கினம் தான். நடக்காத ஒண்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கினம்
ஓ.. மச்சானுக்குள்ளயும் ஒருத்தி இருக்கிறா...ஹா..ஹா..
அவன் சிரிப்பை ஒரு முறைப்பாலே நிறுத்திவிட்டுத் தொடர்ந்தான் .
என்ர சொந்த மச்சாள்தான். அவ ஒரு பிள்ளை தான். சின்னனில இருந்து ஒண்டா தான் வளர்ந்தனாங்கள். நான் பெரிசா அப்படியொண்டும் நினைச்சதில்ல. ஆனால் இந்த பெரிய ஆட்கள் எல்லாம் சேர்ந்து அவளின்ர மனசில ஆசையை வளர்த்திட்டினம். இப்ப நாங்கள் இருக்கிற நிலமையில இதெல்லாம் சாத்தியமாடா..?”
அவனது கேள்வியில் நியாயம் இருக்கத்தான் செய்தது. சுகிர்தனும் புதியவனும் பயணித்துக் கொண்டிருப்பது சாதாரணமான பாதையில் அல்லவே. இலட்சியப்பாதையில் சாதிக்கவென்று பறந்து கொண்டிருப்பவர்கள். சுகிர்தனால் எதுவும் சொல்ல முடியவில்லை. ஆனாலும் ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக சொன்னான்.
எங்கட ஆட்களுக்குள்ள இப்ப திருமணங்கள் கனக்க நடக்குது தானேபிறகென்ன யோசிக்கிறாய்வசி அண்ணைக்கு ஒரு அறிக்கை எழுதி அனுப்பினால் சரி.. அவர் ஏதாவது பதில் சொல்லுவார் தானே….”
ம்.. நீ சொல்றது சரிதான். அதைத்தான் அவளும் சொல்லுறாள். ஆனால்…. எனக்கு ஒரே யோசனையா இருக்கு. அதுவும், இப்ப நிலமை இறுகிப் போயிட்டுது… ஆமி கிட்டக் கிட்ட வந்துகொண்டிருக்கிறான். ஒருவேளை கலியாணத்துக்கிடையில எனக்கு ஏதாவது ஆகிட்டுதெண்டால்... அவளின்ர வாழ்க்கை பாழாகி போயிடும்...” சிறிது அமைதியைப் உகுத்தி மீண்டும் சொன்னான். “ஆனால் அவளோட அண்டைக்கு கதைச்ச நேரம் அவள் கொஞ்சம் தீவிரமா இருக்கிறாள் போல தெரியுது… நான் இல்லாத வாழ்க்கை தன்னால வாழ முடியாது எண்டுறாள்…”
அதற்குள் முகாம் வாயிலை மோட்டார் வண்டி அடைந்து விட்டதைக் கண்டதும்.. கவலைப் படாத மச்சான்.. எல்லாம் வெல்லலாம்..சுகிர்தன் சிரித்துகொண்டே லேசாக சாத்தியிருந்த கேற்றை வண்டியின் முன்சக்கரத்தால் மெதுவாக இடிக்க கேற்திறந்து வழி விட்டது.
அன்றுதான் புதியவன் தன் நண்பனிடம் கூட தன் காதலைப்பற்றி வெளிப்படுத்தியது. அதற்குப் பிறகெல்லாம் அவன் அவளைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டுதான் இருந்தான். வன்னியின் போர்ச்சூழல் இன்னும் மோசமாகிவிட்டிருந்தது. தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் ஆரம்பித்து விட்டன. மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாகிக் கொண்டிருந்தது. மக்கள் புதுக்குடியிருப்பையும் தாண்டி அம்பலவன் பொக்கணை, வலையன்மடம் பக்கம் ஒதுக்கப்பட்டுவிட்டனர். எல்லோர் முகத்திலும் சாவின் பயம் சாயமாக ஒட்டிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் உயிரைக் காக்கும் சிந்தனையைத் தவிர வேறு எதுவும் யாருக்கும் நினைவில் இல்லை. ஆனால்... அவள் மட்டும்.. தன் உயிரை விடவும் சிறுவயது முதல் தனக்குள்ளேயே காதலை ஊட்டி வளர்த்துக்கொண்டிருக்கும் தன் பூவரசனைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தது.
                             *********
 மனம் என்பது கடவுளின் வினோதமான படைப்புத்தான். எவ்வளவு தான் வலிமையுடையதாக இருந்தாலும் எங்கோ ஒரு விடயத்தில் ஆட்கொள்ளப் பட்டுவிடுவது மட்டுமல்லாமல், அதற்காகத் தோற்று போகவும் தயாராகி விடுகிறது. மீனுவைப் பொறுத்தவரையில் பூவரசனின் நினைவுகளுக்குள் அடிமையாகிப் போனாள் என்று தான் சொல்ல வேண்டும். சிறுவயது முதல் ஒன்றாக வளர்ந்திருந்தாலும், எப்போது அவன் தன் வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணிக்கத் துணிந்து குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றானோ, அப்பொழுதுதான் அவன் இல்லை என்ற வெற்றிடம் அவன் மீதான காதலை உணர்த்தியது. நாளாக நாளாக அந்தக் காதலை ஊட்டி வளர்ப்பதே அவள் நாளாந்த வேலையாகிப் போனது.
அவனைப் பார்க்காமலே பல வருடங்கள் இருந்து விட்டாலும், அவனை நினைக்காமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்றே அவளுக்குத் தோன்றியது. இடப்பெயர்வுகளால் அவள் அவனைப் பார்க்கக் கூட முடியவில்லை... அவள் விழிகள் பார்க்கும் திசையெல்லாம் பூவரசனையே தேடிக்கொண்டிருந்தன... ஏக்கங்களோடு தேடிய அவள் விழிகளில் அவனது தரிசனம் அன்று அவளுக்கு கிடைத்தது, கர்ப்பக்கிரகத்திலிருந்த சாமியே உயிர் பெற்று பக்தையின் முன் தோன்றினாற்போல, அப்படியொரு உவகை....
‘’மீனு.. என்ன செய்றாய் இதில நிண்டு...
அவன் குரலைக் கேட்டுத் திரும்பிய அவள் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது... படபடவென்று இமைகள் பட்டாம் பூச்சியாக...
“பூஸ்... எங்கயடா இருக்கிற? உன்னைக் காணாமல் நான் எப்படி தவிச்சுப் போயிட்டேன் தெரியுமா? நீ எப்பிடியடா இருக்கிற? எங்களை நீ தேடவே இல்லையா? இப்படி அடுக்கடுக்காய் எழுந்த கேள்விகளை மனதுக்குள்ளேயே அடக்கிவிட்டு...
“பூஸ்... இங்க எப்ப வந்தனி?” என்றவளைப் பார்த்து முறுவலித்தான் புதியவன் என்ற பெயரைத்தாங்கிக் கொண்டிருந்த பூவரசன்...
“நான் இஞ்சால ஒரு விசயமா வந்தனான். இஞ்ச.. பக்கத்தில தான் இருக்கிறன்... அம்மா என்னடி செய்யிறா?”
“ம்ம்... அத்தை சுகமா இருக்கிறா....” சொல்லிக்கொண்டிருக்கும் போதே தலைக்கு மேலால் துப்பாக்கி ரவைகள் விஸ்... விஸ்... எனக் கீசிக் கொண்டு வந்தன.
“ஏய்.. ரவுண்ட்ஸ் வருது... குனி.. தலையக் குனி மீனு..” கத்திக் கொண்டே அவள் தலையை பிடித்து அழுத்தினான்.  இருவரும் தலையைக் குனிந்து கொண்டு அருகில் இருந்த பதுங்குகுழி வாசலில் அமர்ந்தார்கள்.
“பூஸ்... ஏன்டா எங்களுக்கு இந்த நிலமை.. இது எப்ப முடியும்?..” ஏக்கத்தோடு கேட்ட அவளைக் கனிவாகப் பார்த்தான்.
“முடிஞ்சிடும் மீனு... கவலைப் படாத...” என அவன் கூறிய பல ஆறுதல் வார்த்தைகள் அவளைச் சமாதானப்படுத்த மறுத்தன.
 சில நிமிடங்களில் சத்தம் ஓய்ந்ததும் “ சரி மீனு நான் போக வேணும். அம்மாவைக் கவனமா பார்த்துக் கொள். நான் திரும்பவும் நேரம் கிடைக்கும் போது வருவன்..” என்று கூறி அவன் விடைபெற்ற போது அவள் கலங்கிய விழிகள் மட்டுமே அவனுக்கு விடை கொடுத்தன.

                             *************
வாழ்க்கையே போராட்டமாக மாறிக்கொண்டிருந்தது. சுகிர்தனுக்கும் புதியவனுக்கும் இரண்டு வாரத்துக்கொரு இடமாற்றங்களில் தமது முகாமுக்கான பதுங்குகுழிகள் அமைப்பதிலேயே நேரம் கடந்துகொண்டிருந்தது.
அன்றும் அப்படித்தான்சுகிர்தனும் புதியவனும் தாங்கள் புதிதாக மாறியிருக்கும் முகாமுக்கு அவசர அவசரமாக பதுங்குகுழி அமைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வெட்ட ஆரம்பித்து 10 நிமிடங்கள் கூட ஆகியிருக்காது... கண்ணிமைக்கும் நேரத்துக்குள் ஏவுகணைகள் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின.. முதற்குண்டு விழுந்ததுமே அங்கிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையாக ஓடிப்போய்ப் பதுங்கினார்கள். சுகிர்தன் பொருட்கள் குவித்திருந்த இடத்தில் ஓடிப்போய் விழுந்து படுத்துக் கொண்டான். அவனுக்கு தெரியக்கூடிய தூரத்திலேயே வெறும்தரையில் புதியவன் குப்புறப்படுத்திருந்தான்.
சில கணங்களுக்குள்ளாகவே அடுத்து இரண்டு ஏவுகணைகள் கூவிகொண்டு வந்தன. இந்தத் தடவை ஏவுகணை விழுந்து வெடித்தபோது சுகிர்தனால் கண்களைத் திறக்க முடியவில்லை. எங்கும் ஒரே புகை மண்டலம்... காதுக்குள் அடைத்து விட்டாற்போல ‘நங்...’ என்று ஒலி எழுப்பியது. அருகில் தான் விழுந்துவிட்டது என்று உள்ளுணர்வு உந்த பதைப்போடு நிமிர்ந்து பார்த்தவன் அதிர்ந்தான்....

தொடரும்....

Thursday 26 September 2013

அவள் அப்படித்தான்….. - சிறுகதை

அழகாக அடுக்கப் பட்டிருந்த பொருட்கள் கலைக்கப்  படுவதும் மீண்டும் நேர்த்தியாக அடுக்கப்படுவதுமாக ஒரே செயற்பாடு அந்த சமையலறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது நீண்ட நேரமாக... அவள் அப்படித்தான்...
யன்னலுக்கூடாகத்
தெரியும் பச்சைப் பசேலென்று புல்வெளியோ, வெளியின் மீது அங்கும் இங்கும் குதித்துத்தாவும் அணில் ஒன்றின் அழகிய நடமாட்டத்தையோ , அல்லது அவ்வப்போது புல்வெளியில் வந்திறங்கி இரை தேடுவதும் திரும்ப பறந்து போவதுமாக இருந்த அந்த அழகிய சாம்பல் நிறப் புறாவையோ அவள் கவனித்ததாகத் தெரியவில்லை. 
ஒரே செயற்பாட்டை திரும்பத் திரும்ப அலுக்காமல் ஏன் செய்கிறாள் என்பது யாருக்கும் புரிந்ததில்லை. அவளுக்கும் புரிந்ததில்லை. ஏனென்றால் .. அவள் அப்படித்தான்..
பொருட்களை
அடுக்குவது மட்டுமல்ல, சில வேளைகளில் கை கழுவுவது, அலமாரியில் இருக்கும் உடைகளைக் கலைத்துக் கலைத்து அடுக்குவது, உடைகளுக்கு ஸ்திரி போடுவது, இப்படி அன்றாட செயற்பாடுகளில் அநேகமானவை அவள் மீண்டும் மீண்டும் செய்யும் செயற்பாடே. அவள் அப்படித்தான்.

திடீரென ஏதோ நினைவு வந்தவளாய் சுவர்க்கடிகாரத்தை நோக்கினாள்.  காலை 11.50 காட்டிக் கொண்டிருந்த கடிகார முட்களும் கூட அவளைப் போலவே ஒரே வட்டத்துக்குள் மீண்டும் மீண்டும் நகர்ந்து கொண்டிருந்தன.
நேரத்தைப் பார்த்ததும் அவள் கண்கள் பிரகாசமாகின...  இன்னும் சில நிமிடங்களில் அவன் வந்து விடுவான். அடுக்கப்பட்ட பொருட்கள் நேர்த்தியாக இருக்கின்றனவா என்று மீண்டும் சரிபார்த்து விட்டு வரவேற்பறைக்குள்  வந்தாள். நீலக் கம்பளங்களைப் போர்த்துக் கொண்டிருந்த இருக்கைகளைத் தட்டி அதன் பஞ்சணைகளை சரியாக வைத்து விட்டு அங்குமிங்கும் நடந்தாள். அவளால் சில மணித்துளிகள் கூட அமைதியாக அமர முடியவில்லை.. இன்று மட்டுமல்ல, இதுவும் தினந்தோறும் நடக்கும் செயற்பாடுதான்... நான்கு மணி நேரம் மட்டுமே அவன் வெளியில் சென்றிருப்பான்.. அந்த நான்கு மணித்தியாலங்களும் அவன் வருகைக்காக ஆயத்தம் செய்வாள்..
வாசலில் காலடி ஓசை கேட்க, சடாரெனப் பாய்ந்து சென்று அருகில் இருந்த சாய்மனைக் கதிரையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டு தூங்குவது போலப் பாவனை செய்தாள். கதவு திறக்கப் பட்டதும்  ''ஹாய் மீனும்மா.. அதுக்குள்ளே நித்திரையா'' என்றபடி குனிந்து அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான். அவள் பாசாங்கு செய்வதை அவன் அறிந்திருந்தாலும் தெரியாதது போல, அவளது எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதில் அவனுக்கு ஒரு ஆத்மார்த்த திருப்தி. இதுவும் ஒன்றும் புதிதல்ல..வாரத்தின் ஐந்து வேலை நாட்களிலும் இது நடப்பது தான்... அவள் ஏன் அப்படி நடந்து கொள்கிறாள்... அவள் அப்படித்தான்... 

அவனுடைய அந்த மென்மையான முத்தத்தின் ஸ்பரிஸத்தால் ஏற்பட்ட ஆனந்தக் கிளர்ச்சியை அடக்க முடியாமல் ஹேய்.. பூஸ்…” என்றபடி துள்ளி எழுந்தாள் மீனு. மீனு..ஏய்.. கள்ளி.. நீ தூங்கலையா??” என பொய்யாக ஏமாற்றம் காட்டினான் பூவரசன்.
பூஸ்சாப்பிடுவோம் வா…” என்று பூவரசனின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டே சமையலறைக்குள் சென்றாள்.

சற்றே விசாலமான சமையலறையில் ஒரு ஓரத்தில் அடக்கமான சிறிய ஒரு சாப்பாட்டு மேசை வைக்கப் பட்டிருந்தது. அதைச் சுற்றிலும் நான்கு சாதாரண மரக்கதிரைகள், மின்னடுப்பு, சிறிய குளிர்சாதனப் பெட்டி என ஓரளவு வசதிகளைக் கொண்டதாகவே காட்சியளித்தது. அவளுக்கு பிடித்த நீல பெயிண்ட் அடிக்கப் பட்ட சுவரிலே தன் கையாலேயே ஏதேதோ புத்தகங்களில் வெட்டியெடுக்கப்பட்ட அழகிய படங்களைப் பொருத்தமாக ஒட்டியிருந்தாள் மீனு.
அவன் இல்லாத அந்த நான்கு மணித்தியாலங்களுக்குள் அவனுக்காகப் பார்த்துப் பார்த்து சமைத்த இறால் குழம்பு, கீரை மசியல், வாழைக்காய் பொரியல் எல்லாம் மேசையில் எடுத்து வைத்து விட்டு அவனுக்கு பரிமாறினாள். அவன் அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தான்.
என்ன?” அவள் வாய் கேட்கவில்லை. இமைகள் இரண்டும் சுருங்கி உயர்ந்து கேள்விக்குறியாகியது.
உனக்கு?” ….
எனக்கு பசிக்கல….”
பொய் சொல்லாத மீனு. நீ சாப்பிடேல்ல எண்டால் நானும் சாப்பிடல….”
ம்ஹீம்…”
அப்போ நான் சாப்பிடல…”
பொய்க்கோபத்தோடு அவன் எழுந்ததும் மீனுவின் முகம் வாடியதைக் கண்டதும் உடனே தன் தொனியை மாற்றினான்.
மீனும்மாமருந்து குடிக்க வேணுமெல்லோஅப்ப நான் தீத்தி விட்டால் சாப்பிடுவீங்களோ…” அவன் கெஞ்சும் குரலில் கேட்டதும் மெதுவாய் தலையாட்டினாள். அவன் தனக்கு பரிமாறப்பட்ட உணவை அவளுக்கு ஊட்டிவிட்டு பின்னர் தான் உண்ண ஆரம்பித்தான். முதல் வாய் உணவை உண்டதுமே
ஆவ்.. சூப்பர் சூப்பர்.. எப்படி மீனும்மா இப்படி டேஸ்ட்டா சமைக்கிற? மீனும்மா.. இந்த சண்டேஇந்த றால் குழம்பு எப்படி வைக்கிறது எண்டு எனக்கு சொல்லித் தாறியா..

என்று கெஞ்சும் பாணியில் கேட்டதும், சற்று வெட்கம் அவளைச் சூழ்ந்து கொள்ள.. போடாபொய் சொல்லாதடா…” என்று செல்லமாக அவன் தலையில் தட்டினான். இல்ல உண்மையாத்தான் சொல்லுறன்என்று கூறி விட்டு உண்மையிலேயே அந்த உணவை ருசித்து உண்டான் அவன். இப்பொழுதெல்லாம் அவனுக்கு மீனுவின் ஒவ்வொரு செயற்பாடும் இரசனை மிக்கதாகத்தான் தெரிகிறது. சாப்பிட்டு முடிந்ததும் தட்டை எடுத்துக் கொண்டு போய் கழுவிவிட்டு அவன் நகர அவள் மீண்டும் அந்த தட்டை எடுத்துக் கழுவ ஆரம்பித்தாள்

அவள் அப்படித்தான் என்று தெரிந்தாலும், இதனால் அவளது கைத் தோலில் ஏற்கெனவே பாதிப்பு வர ஆரம்பித்து விட்டதால் அவளை நிறுத்தும் நோக்கில்
 மீனும்மாஅதைப் பிறகு கழுவலாம்.. இப்போ ஒன்று காட்டுறன் வா… “ என்று அவளை இழுத்துக்கொண்டு போனான் அவளுடைய பூவரசன்.
விடுடா.. எனக்கு வேலை இருக்கு ..

என்று இழுபறிப் பட்டுக் கொண்டவள், இயலாமல் அவனோடேயே வரவேற்புக் கூடத்தைத் தாண்டி கணனி அறைக்குள் சென்றாள். கணனிக்கு முன்னால் இருந்த நாற்காலியை நகர்த்தி வைத்து அதனோடே இன்னுமொரு நாற்காலியையும் வைத்து விட்டு அவளை அங்கே அமர்த்தினான். பின்னர் கணனியை இயக்கிவிட்டு சில வினாடிகள் காத்திருந்த பின் அதில் சில படங்கள் உள்ள கோப்புகளை திறந்து அவளுக்குக் காட்டியதும் அவளது முகம் செந்தாமரையாய் மலர்ந்தது. மீனுவின் பல புகைப்படங்களை அழகுற வடிவமைத்து இருந்தான் அவளது பூவரசன். ஒவ்வொரு படத்தையும் கேள்விக்கு மேல் கேள்விகேட்டபடியே இரசித்தவளுக்கு சமையலறையில் தான் கழுவ வைத்திருந்த பாத்திரங்களைப்பற்றி மறந்தே போனது.

அவன் கைத்தொலைபேசி சிணுங்க ஆரம்பித்ததும்,... அதனை எடுத்து அழுத்தியவாறே...
ஹலோ..என்ற அவன் குரலைத் தொடர்ந்து மறுமுனையில்,
ஹலோ... மிஸ்டர் இந்திரனா?” என்ற பெண்குரலைக் கேட்டதும்.. சற்று சங்கடத்துடன் திரும்பி மீனுவைப் பார்த்தான்... எதுவும் புரியாதவளாக அவன் முகத்தையே மீனு பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும்...

ஹலோ... ஹலோ.... இங்க சிக்னல் தெளிவா இல்ல.. நீங்கயாரு... ஹலோ...
என்றபடி தொடர்பைத் துண்டித்தான். அவள் முகத்தில் படர்ந்திருந்த கேள்வியைக் கண்டதுமே,
 “யாரெண்டு தெரியேல்ல... ஒண்டும் விளங்கேல்ல.. கட் ஆகிட்டுது...என்ற படியே சுவர்க்கடிகாரத்தைத் திரும்பிப் பார்த்தவன்,

அடடா... நேரம் போட்டுது, இப்ப மீனுக்குட்டி மருந்து குடிக்க வேணும்..

என்று கூறிக்கொண்டே அவசர அவசரமாக அவன் மீனுவுக்கான மருந்துகள் சிலவற்றை எடுத்துக் கொண்டு வந்து குடிக்கக் கொடுத்தான். மருந்துகளைக் குடித்த சில நிமிடங்களிலேயே அவள் கண்களைத் தூக்கம் பற்றிக் கொள்ள ஆரம்பித்ததும், பூவரசனை இழுத்துக் கொண்டு வரவேற்பறையில் அந்த நீண்ட சொகுசு ஆசனத்தில் அமர வைத்தாள். முகத்தில் சற்றேனும் புன்னகை மாறாமலே அமர்ந்துகொண்டவனின் அருகில் இருந்து அவன் மடியில் தலை சாய்த்தாள் மீனு. அவளது நெற்றியில் புரண்ட மென்மையாக கேசங்களை நீவிக் கொடுத்தபடியே அவளது முகத்தை ஒரு தாய்க்குரிய பரிவுடன் பார்த்துக் கொண்டே தன் உடலை நன்றாகப் பின்னோக்கி சாய்த்துக் கொண்டான்.

மனத்தின் விந்தைகளை ஆய்ந்தறிந்து கொள்ள முடிவதில்லை. பலவேளைகளில் ஏனென்று கேளாமலே அதன் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து விடுகிறோம். அதனால் தானோ என்னவோ சிறுவயது முதல் தமது சின்ன சின்னக் கட்டளைகளால் வழிகாட்டி வளர்த்தவர்களைக் கூட தட்டிக் கழித்துவிட்டு மனத்தின் கட்டளைக்கு மட்டும் தலைசாய்த்து வாழ்கிறான் இவன். இந்த இரண்டு வருடங்களுக்குள் அவனது வாழ்க்கை முழுவதையும் மீனுவே ஆக்கிரமித்துவிட்டாள். ஆரம்பத்தில் அதைத் தன் கடமையாக ஏற்றுக் கொண்டு ஆரம்பித்த நாடகம் இன்று அவன் வாழ்க்கையாகவே மாறிபோனது.... ஒவ்வொரு நிமிடங்களும் அவளுக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் அவன் அவளில்லாத வாழ்க்கையை நினைத்து அவ்வப்போது கலங்குவதுண்டு. அவளுக்காக அவன் கற்றுக் கொண்டவை ஏராளம். இணையத்தளத்தில் அவன் அவளுக்காக உளவியல்  தொடர்பான அத்தனை விடயங்களையும் தேடித் தேடிக்கற்றுக் கொண்டிருக்கிறான்.

அந்த நாடகத்தின் ஆரம்பத்தை அவன் மனச்சிதறல்கள் ஒன்று சேர்த்துக் கோர்க்க ஆரம்பித்துவிட்டன.....


தொடரும்.....