Tuesday 5 November 2013

தனிமையில் பெண்ணும் நட்பின் தொல்லைகளும்.... சிநேகிதியுடன் - தொடர் 1

வணக்கம் அன்புத் தோழிகளே....

எனது இந்த புதிய தொடர்  தமிழ்நண்பர்கள் தளத்தில் இணைந்திருக்கும் உங்களுக்குப் பலவிதங்களில் உபயோகமாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு ஆரம்பிக்கிறேன்... இவை என்னோடு அன்பாகப் பழகிய சில தோழிகள் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளை என்னோடு பகிர்ந்து கொண்ட போது அவர்களுக்கு நான் கூறிய ஆலோசனைகளும் வழிகாட்டல்களும்...
நான் மிகப்பெரிய அனுபவம் வாய்ந்தவள் இல்லையெனினும், என் தோழிகள் என்னுடன் மனம்விட்டுப் பேசும் தருணங்களில் அவர்களுக்குப் பயனுள்ளவளாக இருந்திருக்கிறேன்.. இனியும் இருக்க விரும்புகிறேன்... அது மட்டுமன்றி என் வாழ்க்கைக்கும் கூட இந்த தேடல் பயன்படும் என நம்புகிறேன்.
இங்கே பகிரப்படும் கேள்வி பதில்களில் பெயர்களும் இடங்களும் மாற்றம் செய்யப்பட்டே பதிவு செய்யப்படுகின்றன என்பதை அன்புத் தோழிகளுக்கு தெரிவிக்கிறேன்.... எனவே இத்தொடரைப் படிப்பவர்கள், இதனால் தாங்கள் அடையும் பயன்களையும், தங்கள் கருத்துக்களையும் மட்டுமன்றி, என் ஆலோசனையில் உள்ள தவறுகளையும் சுட்டிக் காட்டும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்...

இன்னும்... தோழிகள், இளவயதுப் பருவத்தினர் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அல்லது சந்தேகங்களை எனக்குத் தெரிவிக்கும்பட்சத்தில் அக்கேள்விகளையும் அவற்றிற்கான பதில்களையும் கூட இப்பகுதியில் வெளியிட நினைத்துள்ளேன்.. எனவே உங்களிடமும் இருந்து கேள்விகளை எதிர்பார்க்கிறேன். இதன் மூலம் தங்களைப் போன்ற பிரச்சனைகளை எதிர்நோக்கும் ஏனைய பெண்களுக்கும் உதவியாக இருக்கும்.... ஆண்கள் கூட தங்கள் மனைவி, பிள்ளைகள், மற்றும் தெரிந்தவர்களின் சார்பில் கேள்விகளைக்  கேட்கலாம்... வாரம்  ஒரு கேள்விக்கான பதிலையே பதிவு செய்ய முயற்சிக்கிறேன்.
தங்கள் கேள்விகளை அனுப்புகிறவர்கள் கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்புங்கள்...
 
மின்னஞ்சல்: poongothaichelvan8@gmail.com

உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்...
தொடர்ந்து இன்றைய கேள்விக்குள் பயணிப்போமா???



சிநேகிதியுடன்....

தோழி, எனக்கு 40 வயதாகிறது, வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியூரில் தனியாக வசிக்கிறேன். அன்பான கணவர், மக்கள் இருவர்.
இங்கு நான் வேலைக்கு வந்த இடத்தில் ஒருவருடன் நட்பு ஏற்பட்டது.
அது சாதாரண நட்பாகவே இருந்தது. தனியாக இருக்கும் எனக்கு இந்தப் புதிய ஊரில் பல உதவிகள் செய்துள்ளார், ஆனால் அவர் இப்போது என்னை மிகவும் விரும்புகிறார் என்பதை சொன்னார். அவருக்கு மனைவி இல்லை. பல உதவிகளை அவரிடம் இருந்து பெற்ற எனக்கு அவரை எதிர்கொள்ள முடியவில்லை.
மிகவும் தர்மசங்கடத்தில் உள்ளேன்.. இந்த நிலையில் நான் என்ன செய்யலாம்... ஒரு ஆலோசனை சொல்லுங்களேன்...

தனிமையில் சில நிமிடம்.....

பெயர் குறிப்பிட விரும்பாத தோழிக்கு!
சிநேகிதியின் அன்பான வணக்கம்..
தங்கள் பிரச்சனை அறிந்து கொண்டேன்.
வெளியூரில் தனியாக வேலை நிமித்தம் வாழும் பெண்களுக்கு இத்தகைய பிரச்சனைகள் வருவது. இயல்பு.
உங்கள் சங்கடத்துக்கு நான் தரும் சில ஆலோசனைகள் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
உங்களுக்கு உதவி செய்த அந்த நண்பருடன் எவ்வளவு காலம் உங்களுக்கு நட்பு இருந்துள்ளது என்பதைப் பொறுத்து நீங்கள் செயற்பட வேண்டிய அவசியம் இங்கே இருக்கிறது.

  1. அந்த நண்பர் உங்களுக்கு குறுகியகாலமாகத்தான் நண்பரா? அப்படியானால் உடனடியாக அவரிடம் இருந்து விலகி விடுங்கள். அவர் உங்களுக்கு உதவி செய்ததன் பிரதான நோக்கமும் இதுவாகவே இருக்கும்.
  2.  
  3. அந்த நண்பர் நீண்டகாலம் நண்பராக இருந்து பல உதவிகளைச் செய்து வந்த பின் அவருக்கு அப்படி ஒரு மன நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால், அதுவும் மனித இயல்பே. இங்கே எம்முடைய நெறிப்படுத்தலும் மன உறுதியும் அவசியமாக உள்ளது.

சகோதரி, உங்கள் நண்பருக்கு  மனைவி இல்லை என்பதைப் பற்றி துளியேனும் நீங்கள் சங்கடப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவர் மீது எழும் பச்சாத்தாபம் உங்களைத் தவறான முடிவுக்கு கொன்டு செல்லும். அதை விடுத்து எத்தனையோ வாழ்விழந்த பெண்களும் முதிர்கன்னிகளும் காத்திருக்கிறார்கள் என்பதை அவருக்குத் தெளிவு படுத்துங்கள். அவர் அன்பு செய்வது இன்னொருவனின் மனைவியை என்பதை, அதாவது நீங்கள் மாற்றானின் மனைவி என்பதை அவருக்கு தெளிவாகவும் உறுதியோடும் கூறுங்கள்.  ஒருவர் செய்யும் உதவிகளுக்கு பிரதியுபகாரமாக எந்த உதவியையும் செய்யலாம். ஆனால் வாழ்க்கையைக் கொடுக்க முடியாது. அப்படி அந்த நண்பர் எதிர்பார்த்தால், அவர் உங்களுக்கு செய்த உதவிகளுக்கு அர்த்தமே மாறிவிடும். அவரிடம் “நமக்கிடையே இருந்தது வெறும் நட்பு மட்டுமே” என்று வலியுறுத்துங்கள். உங்கள் குடும்பத்தை, முக்கியமாக உங்கள் கணவனை நீங்கள் எவ்வளவு தூரம் அன்பு செய்கிறீர்கள் என்பதையும், கணவருக்கும் குழந்தைகளுக்கும் நீங்கள் துரோகம் செய்ய முடியாது, அவர்களை மறந்து வாழ முடியாது என்பதையும் தெளிவாக அவருக்கு வெளிப்படுத்துங்கள்,

சில வேளைகளில் இது தற்கொலை செய்துவிடப் போவதான மிரட்டலுக்கும் மாற வாய்ப்பு உண்டு. ஒருவேளை அப்படியொரு சந்தர்ப்பம் ஏற்படுமாயின், அந்த நேரம் நீங்கள் பிடித்து வைத்திருக்க வேண்டியது உங்கள் மன உறுதியைத் தான். பெண்களின் இளகிய மனதைப் பயன்படுத்தப் பிரயோகிக்கும் ஆயுதம் இது. அந்த நண்பரை தனிமையில் சந்திப்பதை நிறுத்திவிடுங்கள். முடிந்தவரையிலும் நண்பிகளோடு அல்லது யாராவது நம்பிக்கைக்குரிய பெண்களோடு சேர்ந்திருக்க ஆரம்பியுங்கள்.

இன்னும், உங்கள் மனதில் தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க, உங்கள் கணவன் பிள்ளைகளோடு அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் கணவனுடனான இனிமையான வாழ்க்கையின் நினைவுகளை மீட்டும் வகையில், திருமணப் புகைப்படங்களோ அல்லது கணவன் பிள்ளைகளோடு நின்று எடுத்த நிழற்படங்களைப் பார்த்துக் கொள்ளலாம். மனதுக்கு இதமளிக்கும் நல்ல நூல்களை வாசிக்கவோ. அல்லது, மனதுக்கு இதம் தரும் மெல்லிசைப் பாடல்களை இரசிக்கவோ ஆரம்பியுங்கள், உங்கள் கணவன், பிள்ளைகளுடனான எதிர்கால வாழ்க்கை பற்றித் திட்டமிடுங்கள்.
மொத்தத்தில், நீங்கள் உங்களைப் பலப்படுத்திக் கொண்டு அந்த நண்பரிடம் முழு மன உறுதியோடு அவரின் விருப்பத்தை நிராகரித்து விடுங்கள்.

எப்படியும் வாழலாம் என்று வாழாமல், இப்படித்தான் வாழ வேண்டும் என்ற எண்ணதை உறுதியாக உங்களுக்குள் பதித்துக் கொள்ளுங்கள். அது உங்களை நெறிப்படுத்தும்... 

நண்பிகளே, நண்பர்களே.... இந்த வாரம் தனிமையில் சில நிமிடங்கள் இனிதே என்னோடு பயணித்தீர்களா.. உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்.. காத்திருக்கிறேன்..

அன்புடன் சிநேகிதி

3 comments:

  1. இன்னும், உங்கள் மனதில் தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க, உங்கள் கணவன் பிள்ளைகளோடு அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள்.//

    தொலைபேசியில் தொடர்பு கொள்வதை விட, அந்த நண்பருக்கு அவர்கள் கணவனை வர வைத்து நேரில் அறிமுகம் செய்து வைத்தால் தவறான எண்ணம் கொண்ட ஆண்கள் மனம் மாறிவிடுவார்கள்.

    ReplyDelete
  2. பிரயோஜனம் உள்ள பதிவு தொடருங்கள்.

    ReplyDelete
  3. அட எவ்வளவு பெரிய சேவை செஞ்சிருக்கிறீங்க...
    சூப்பர் இப்படியான சேவை நம்ம பெண்களுக்குக் கட்டாயம் தேவை

    உங்கள் சேவையைத் தொடருங்கள்

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!