Saturday 16 November 2013

பருவ வயதில் சில்மிஷ சிக்கல்கள்! சிநேகிதியுடன்.. தொடர் - 2

வணக்கம் நட்பு நெஞ்சங்களே...
இன்றும் உங்கள் சிநேகிதி ஒரு புதிய கேள்வி பதிலுடன் வந்திருக்கிறேன்... சிறு வயதிலும் கூட தம் பிரச்சனைகளை மற்றவர்களிடம் கூறித் தீர்வு காண விரும்பும் ஒரு தங்கையின் கேள்வியோடு பயணிப்போம். பயணம் சற்று நீண்டது என்பதால் நேரடியாக கேள்விக்குள் செல்லலாம் வாங்க...

சிநேகிதியுடன்.......
அக்கா, எனது பெயர் சாமினி. எனக்கு 15 வயதாகிறது. அம்மா இல்லை. அப்பா தனியாக போய்விட்டார். இப்போது அத்தை வீட்டில் நின்று தான் படிக்கிறேன். வீட்டு வேலைகளை செய்வதிலேயே படிக்க முடியாமல் போகிறது. அத்தை கொடுமைப்படுத்தவில்லை என்றாலும் அவர்கள் வீட்டில் நிற்பதால் நானாகவே வீட்டு வேலைகளை செய்து வருகிறேன். அத்தை பையனுக்கு 16 வயதாகிறது. அவன் செய்யும் கிண்டல் கேலிகளை சகித்து வரவேண்டியுள்ளது. சில நேரம் அது எல்லை மீறி செல்லும் போது தனியாக அழுகிறேன். அவன் கேலி செய்தாலும் என் மீது பாசம் வைத்திருப்பது புரிகிறது. இதனால் என் மனமும் சில நேரம் தடுமாற்றம் கொள்கிறது. எங்கள் இருவருக்கும் தான் திருமணம் நடக்கும் என்பது நிச்சயமில்லை. அதனால் தான் ஒதுங்கியே இருக்கிறேன். அத்தையும் அவனை கண்டிப்பதில்லை. இதனால் அத்தையிடம் சொல்லவும் பயமாக இருக்கிறது. என்ன மாதிரி முடிவெடுப்பது என்றே தெரியவில்லை அக்கா.. ஏதாவது ஆலோசனை சொல்லுங்க..

தனிமையில் சில நிமிடங்கள்.....
வணக்கம் தங்கையே,
15 வயதேயான நீங்கள் உங்கள் பிரச்சனையைக் கூறி அக்காவிடம் ஆலோசனை பெற வேண்டும் என நினைச்சீங்களே.. அதற்கு முதலில் எனது பாராட்டுக்கள். இது உங்களிடம் உள்ள தெளிந்த சிந்தனையைக் காட்டுகிறது. இந்த வயதிலேயே தன் பிரச்சனைகளைத் தீர்க்க பெரியவர்களிடம் ஆலோசனை கேட்கும் நீங்கள் நிச்சயம் எதிர்காலத்தில் ஒரு சிறந்த வாழ்க்கை வாழ்வீர்கள் என்பதில் எனக்கு கடுகளவும் சந்தேகம் இல்லை. அதற்கு இப்பொழுதே என் வாழ்த்துக்கள்
சாமினி, படிக்கும் வயதில் அம்மா இல்லாமல், புரிந்துணர்வற்ற அத்தை, எப்பொழுதும் நச்சரிக்கும் அத்தை பையன்.. இப்படியான சூழலில் நீங்கள் எதிர்நோக்கும் வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறதம்மா. ஆனாலும் இந்த பிரச்சனையில் இருந்து மீளுவதற்கான புத்திசாதுரியம் உங்களிடம் நிறையவே இருக்கிறது என்று நம்புகிறேன். அதனால், உங்களுக்கு ஆலோசனை தர இந்த அக்கா மகிழ்வோடு முன்வருகிறேன்.
முதலில் உங்கள் அத்தை பற்றிப் பேசுவோம். அத்தை உங்களைக் கொடுமைப் படுத்தவில்லை என்று நீங்கள் சொல்வதைப் பார்க்கும் போது, அத்தையிடம் ஒரு அறியாமை அல்லது புரிந்துணர்வு இன்மை தான் அங்கு நிலவுகிறது எனப் புரிகிறது.
தங்கையே, பொதுவாக பெண் பிள்ளைகள் வீட்டில் பெரியவர்களுக்கு வேலை செய்து கொடுப்பது சாதாரணமானது தான். அது நல்ல பண்பும் கூட. ஆனால் அது உங்கள் படிப்பைப் பாதிக்கும்படி அமையக் கூடாது. அதனால், நீங்கள் எந்த நிலை வரும்போதும் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர் இல்லாமல் அத்தையுடன் வாழும் நீங்கள் எப்பொழுதும் அடுத்தவர் கைகளை எதிர்பார்க்க முடியாது. அதனால், குறிப்பிட்ட வயது வரும்போது உங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டுமென்றால், கல்வியில் நீங்கள் அதிக கவனம் செலுத்துங்கள். நீங்களாகவே வீட்டு வேலைகளைச் செய்வதால் இந்தப் பிரச்சனையை நீங்கள் கையாள்வது மிகவும் இலகுவாக இருக்கும். அதாவது, நீங்கள் அத்தைக்கு செய்து கொடுக்கக் கூடிய வேலைகளை உங்களுக்குள் திட்டமிடுங்கள். உங்கள் கல்விக்காக நேரத்தை ஒதுக்குங்கள். அதிகாலையிலும், மாலையிலும் அதிகம் கல்வியில் கவனத்தை செலுத்துங்கள். அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்தவுடன் கற்பது மிகவும் நல்லது என பலர் சொல்லுவார்கள். ஏனென்றால் அந்த வேளையில் எங்கள் மனமும் உடலும் ஓய்வுக்குப் பின் நல்ல புத்துணர்ச்சியோடு இருக்கும். சிந்தனை ஓட்டம் அதிகமாக இருக்கும்.
அதுபோல வீட்டுப்பாட வேலைகளை அதிகமாக இரவு அல்லது மாலை வேளையில் செய்யலாம். இதை விட பகலில் பாடசாலைக்குப் போய் வந்த பின் சிறிது நேரம் ஓய்வெடுக்கவும், வேறு உங்களுக்குப் பிடித்த காரியங்களில் ஈடுபடவும் பழக்கப் படுத்திக் கொள்ளுங்கள். இந்த நேரங்கள் தவிர்ந்த ஏனைய நேரங்களில் உங்களால் இயன்ற வேலைகளை அத்தைக்கு செய்து கொடுக்கலாம். நீங்களாக வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தால், அத்தைக்கு உங்களைப் பற்றிய அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இதனால் என்றாவது உங்களால் வேலை செய்ய முடியாமல் போகும் போது அது அத்தைக்கு பெரிய குறையாகத் தெரிய வாய்ப்பு இருக்கிறது. எனவே, இப்பொழுதே வேலைகளையும் கல்வியையும் திட்டமிட்டு செய்யப் பழகுங்கள். இது எதிர்காலத்திலும் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

அத்தையோடு வழக்கமாக நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்? சாதாரணமாக பேசுவீர்களா? அல்லது அமைதியான, பயந்த சுபாவம் உள்ளவரா? சாதாரணமாகப் பேசுபவராக இருந்தால், உங்களுக்கு இன்னும் இலகு. அத்தையோடு பேசும் போது, பேச்சுவாக்கில் உங்கள் கல்வியைப் பற்றி அத்தையுடன் பேசுங்கள். பாடசாலை விடயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். அத்தோடு, உங்களுக்கு இருக்கக்கூடிய பாடச் சுமைகளைப் பற்றியும் பேசுங்கள். இது சாதாரணமாகப் பேசும் போது, அதே பேச்சுவாக்கில் சொன்னால், சில வேளைகளில் அத்தையாலும் புரிந்துகொள்ளமுடியும்.  அமைதியான சுபாவம் உள்ளவராக இருந்தால், ஓரளவுக்கேனும் பேச முயற்சி செய்யுங்கள்.
அடுத்து அத்தைப் பையனைப் பற்றிப் பார்ப்போம்...
அத்தைப் பையன் உங்களை கேலி செய்வதும் அத்தை அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும் உங்களுக்கு வேதனையைத் தருகிறதென்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இங்கும் நீங்கள் அத்தை பையனோடு பேச வேண்டியது அவசியம். அவரது பேச்சுக்கள், நச்சரிப்புகள் உங்களுக்கு கஸ்ரத்தைக் கொடுக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாமலே அவர் அதை செய்து கொண்டிருக்கக் கூடும். அதனால் நீங்கள் பேச வேண்டும். தங்கையே, என்னைப் பொறுத்தவரையில் பெரும்பான்மையான பிரச்சனைகள் பேசித் தீர்த்துக் கொள்ளக் கூடியவையே. நாம் பேசாது இருப்பதால் தான் பிரச்சனையைப் பூதாகரமாக்கி விடுகிறோம். அமைதி காப்பது நல்ல பண்பு. ஆனால் பேச வேண்டிய இடத்தில் பேசாது விட்டால் நாம் பலவீனர்களாகி விடுவோம்.
அடுத்து, உங்கள் மனதில் சிறு தடுமாற்றம் ஏற்படுவதைக் காண முடிகிறது. சாமினி, 15 வயது என்பது மிகவும் முக்கியமான வளர்ச்சிக் கட்டத்தின் வயது. இது கட்டிளமைப் பருவம் (டீன் ஏஜ்) என்பார்கள்.  இந்தப் பருவத்தில் உடலில் ஏற்படும் ஹார்மோன் சுரப்புக்களால் உடலிலும், மன நிலையிலும் பல மாற்றங்கள் நிகழும் பருவம் இது. இதனால் தான் எதிர்ப்பால் கவர்ச்சியும் தடுமாற்றங்களும் ஏற்படுகிறது. ஆனால் அதை சரியாகப் புரிந்து கொண்டால், இந்த நிலையை உங்களால் கையாள முடியும். இப்பொழுது நீங்கள் எதைப்பற்றியும் கண்டு கொள்ளாமல் படிப்பை மட்டும் முனைப்புறுத்துவதே சிறந்தது. அத்தைப் பையனின் பேச்சுக்களைக் கண்டும் காணாதது போல் இருந்து விடுங்கள். அதை எல்லாம் கவனித்து உங்கள் கவலை, சந்தோசங்களை வெளிப்படுத்தினால் தான் உங்கள் அத்தைப் பையனும் அதைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பார். எதையும் கவனிக்காதது போல, அல்லது அதைப் பற்றிக் கவலைப்படாதது போல் இருந்து விட்டால் அவர்கள் தாமாகவே நிறுத்திக் கொண்டு விடுவார்கள்.
முடிந்தவரை வீட்டில் இருக்கும் போது தனிமையில் இருப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அத்தையின் கண்ணில் படக்கூடியவாறு அல்லது, நீங்கள் பேசுவது அத்தைக்குக் கேட்கக் கூடிய வகையில் இருந்து கொள்ளுங்கள். இது அத்தைப் பையனின் தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்க்க உதவியாக இருக்கும். பொதுவாக ஆண்கள் தமது அம்மாவுக்கு முன்னால் மோசமாக நடந்து கொள்ள மாட்டார்கள். அப்படியே நடந்து கொண்டாலும் தாய் அதைக் கண்டிப்பாள். அத்தை அவனைக் கண்டிப்பதில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படிக் கண்டிக்கா விட்டாலும், அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவவால் அவதானிக்கக் கூடியதாக இருக்கும். அதனால், உங்களைப் பற்றித் தேவையற்ற அபிப்பிராயங்கள் ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
இறுதியாக இந்த அக்கா உங்களுக்கு திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்ல விரும்புவது...
# என்ன பிரச்சனை வந்தாலும் என் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவேன் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்... உங்களது எந்தத் தடுமாற்ற உணர்வும் படிப்பில் தாக்கம் செலுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது ஒன்றே உங்களுக்கு இறுதி வரை கை கொடுக்கும்...

நல்லது நட்பு நெஞ்சங்களே... இந்த சிநேகிதியுடன் ஒரு நீண்ட பயணம் செய்து வந்திருக்கிறீர்கள்.. உங்கள் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன்.  
உங்கள் கருத்துக்களையும் கேள்விகளையும் வழக்கம் போலpoongothaichelvan8@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்புங்கள்... காத்திருக்கிறேன்...
நட்புடன் உங்கள் சிநேகிதி...

2 comments:


  1. அருமையான அறிவுரைகள் முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும் என பலர் சொல்வதுண்டு இன்று அதை சகோதரி உங்கள் சொல்லால் உணர்த்தி விட்டீர் உங்கள் அறிவுக்கூர்மைக்கு ஓராயிரம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ. :))

      Delete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!