Monday 8 September 2008

நீ வருவாய்

சென்று வருகிறேனென்று
குறிப்பெழுதிச் சென்றவனே
வந்த தடம் அறியாது - நீ
சென்ற இடம் தெரியாது
என்று இனி மீண்டும் வருவாய்
என்றும் புரியாது..


ஏனிப்படி செய்தாய்?..
ஏதுமறியாது இருந்திருப்போமே
எங்கேயோ எப்படியோ என நீ
இங்கு வரும்வரை நினைத்திருப்போம்
வெடியோசை வானெழும்போதெலாம்
இடிபோன்று உன் நினைவு - உன்
மென்நகையும் மெதுநடையும்
இன்முகமும் முன்தோன்ற
என்னவானாயோ என நெஞ்சு
எண்ணி வெதும்புதடா..
ஏனிப்படி செய்தாய்?..
முடிந்தால் மறுபடியும் சந்திப்போம் என்று
முடிவில் கிறுக்கி எழுதியிருந்தாயே
உறவுகளை இழந்து இழந்து
உணர்வுகள் மரத்துப்போக
இனியும் வேண்டாம் என்று
இதயம் துடிக்குதடா
இல்லை...இல்லை..
நாம் மறுபடியும் சந்திப்போம்
நீ வருவாய்..
மறவனாய் போர்க் களத்திடையோர்
புறம்பாடி நீ வருவாய்..
குறுகுறுக்கும் சிறு மீசையினடியில்
குறுநகை நெளிய நீ வருவாய்..
வெறுங்கையோடன்றி வீறுநடைபோட்டு
வெற்றிச் சேதியோடு நீ வருவாய்..
அறம் வெல்லும் என்று நான்
அமைதியாய் காத்திருப்பேன்
ஆனால்.....
உறவிழந்தோம் என்ற சேதி மட்டும்
இனியெமக்கு வேண்டாம்
நீ வருவாய்....
என் வீட்டு முற்றத்தில்
நாற்காலி போட்டமர நீ வருவாய்..
என் குழந்தைகள் உன் கழுத்தை
எட்டி வளைத்து சித்தப்பாவென
தொங்கி விளையாட
நீ வருவாய்......