Tuesday 22 January 2013

முத்தம்...

சுருங்கிக் கிடக்கும் மூளைக்குள்
சுளீரென்ற ஒரு தாக்குதல்……
சுதாகரித்துக் கொள்ளுமுன்
சுழன்றெழுந்த சுனாமி……
சில்லென்று எனக்குள் சிலிர்த்து
சிதறடித்த பனிப் பந்து…..
அன்பென்ற தகவல் சொன்ன
திண்ணிய முத்திரை……

மின்னல் வெட்டும் நேரத்துள்
மென்மையாய் பதித்து
பெண்மைக்குள் பதுங்கிக்கிடந்த
உண்மை ஏக்கத்தை உணர்த்தி நின்ற
வண்ணப் பூந்தென்றலின் வருடல் அது..

உணர்வுகள் உலுப்பிய உதடுகள் எங்கோ அந்த
உதடுகள் தாங்கிய உருவம் எங்கோ.. அவை
ஊற்றிச் சென்ற உணர்வுகள் மட்டும்-தீ
மூட்டி நெஞ்சைப் பரவசமூட்டும்
தூக்கிச் சென்று நிலாவில் அமர்த்தும்…
பூக்களின் மடியில் தாலாட்டி நிற்கும்

நீண்ட காலத் தாகம் தீர்க்க- காலம்
தாண்டி என்னை மூழ்கடித்த தீர்த்தம்..
ஆண்டுகள் ஆயிரம் போனாலும்
மாண்டு போகா நினைவிது..

வாழ்வில் இனிமேலும்
பெறற்கரிய முத்து.. அந்த
மறக்க முடியா முத்தம்…



இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

No comments:

Post a Comment

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!