Monday 25 October 2010

செம்மொழி தாயாள்

தாயே தமிழணங்கே
தலை சாய்த்தேன் உன் பாதம்
கன்னித் தமிழ் புனைய
கனிந்து வரமருள்வாய்
உன்னைக் கனம் புரிய
உவந்து வரமருள்வாய்
நாணம் அச்சமின்றி என் கவியில்
நாவண்ணத் தமிழ் மணக்க
நல்ல தமிழ் நாயகியே
நயந்து அருள் புரிவாய்
சுந்தரத் தமிழ் புனைந்து
சுகந்தமாய் நீர் உணர
வந்தனங்களோடு வந்தேன்
தத்தி நடை பயின்று தவழ்ந்து திரிந்து
ஆங்காங்கே சிதறுண்ட
அழகிய தமிழ் பொறுக்கி
மெல்ல வாயிலிட்டு மென்று களிக்கின்ற
பச்சிளம் பாலகன் யான்
மாநாட்டில் கவிபாடும்
மாண்பெனக்கு கிட்டவில்லை
மனம் நொந்து வேதனையில்
மூழ்கிப் போகயிலே
எந்தையின் முன் தோன்றி அன்று
ஏடா எடடா ஏடடா
பட்டெனப் பாடடா பாட்டடா என்ற
பட்டொளித் தாயாள் என்முன்
பளிச்செனத் தோன்றினாள்
தமிழ் மகவே சோகமென்ன
தவிப்பதெல்லாம் தேவையில்லை
தாயைப் பாடுதற்கு உனக்கு
தனியரங்கம் எதற்கம்மா
உலகெல்லாம் என்மக்கள்
உவப்புடன் படித்தறிய
வலைப்பின்னல் வழியேறி
வனைவாய் உன்கவியென்றாள்…
அன்னைத் தழிழவளின் கட்டளையை
அகமதில் ஏற்று வந்தேன்
அவளைப் புகழைப் பாட
ஆசை அறைய ஓடிவந்தேன்
விசைப்பலகை மீதென்
விரல்கள் பாவின தன்னை
இசைப்பதற்கு வழியீந்த-என்
இனிய தமிழுக்கு நன்றிகள்

அன்னையை அலங்கரித்து அவள்
தொன்புகழ் பாடுதற்கு
மன்னார் மண்ணிலே மாபெரும்
செம்மொழி மாநாடு
என்ன புண்ணியம் செய்தனரோ
மன்னார் மண்ணும் மாந்தர்களும்
பென்னம் பெரிய விழாவினில்
பெருக்கெடுத்தோடும் தழிழுணர்வு

கன்னித்தமிழ் தாயே எம்
காயங்கள் ஆறவில்லை எனினும்
கனிமொழிக்கு விழா எடுக்கும்
கடமை எமதம்மா

இன் நகை பூக்கும்
இளநங்கை நம் தமிழாள்
செம்மொழி யென்று
சீர் பெற்ற செந்தமிழாள்
வாசமலர்கூட வாடி வதங்கிவிடும்
வண்ணத்தமிழ் வாடிடுமோ

ஆறைந்து வருடங்கள்
உயிரீந்து காத்த தமிழ்
ஆடி அடங்கிடுமோ
பொங்கிப் பிரவகித்து
பூரித்து மகிழ்ந்த தமிழ்
மங்கிப் போய்விடுமோ

ஆரத் தமிழணிந்து
ஆதிர நடைபோட்டு
வாழ்க தமிழென்று
ஆர்ப்பரித்து வாழ்ந்திட்ட
வீரத் தமிழ் இனியும்
வீழ்ந்து போயிடுமோ

தமிழ் காத்த மன்னர்கள்
தளர்ந்து போகலாம்
தமிழன்னை தளர்வாளோ
தமிழ் வாழ்ந்த மண்ணுக்கு
தங்க நகை அடகு மீட்க
சிலவாரம் முன் சென்றேன்
தரமிழந்து களையிழந்த பூமிகண்டு
தவிதவித்துப் போனேன்-ஆனால்
தடவிக் கொடுத்தது ஒரு விடயம்
தமிழ் இன்னும் சாகவில்லை
பெயர்ந்து நாம் போனாலும்
பெயர்ப் பலகைகள் இன்னும்
பேணிக் காக்கின்றன தமிழை
வேற்று மொழி இடைச்சொருகல்
இருக்கத்தான் செய்கின்றன-ஆனால்
இனிய தமிழ் இறக்கவில்லை
இறக்கக் கூடாது… இறக்கக் கூடாது…
முடிசூடிக் காத்த தமிழ்
முகவரியிழக்கக் கூடாது
இன்னல் இடர் வரினும்
இறப்பே தாம் வரினும்
இனிக்கத் தமிழ் இயன்ற எம்
நாவு சோராது
அழகுத் தமிழ் பாடி
அவனி தனில் மேவி
அதிரப் புகழ் பாடி
என்றும் வாழ்ந்திருப்போம்

தமிழர் நம் வாழ்வு
தவிதவித்துப் போச்சு
தரணியில் எமது நிலை
தலைகீழாய் ஆச்சு
தாயே உன் மக்கள்
தளர்வுற்றுப் போனரம்மா
….    ….    ….
வித்தாகிப் போனவரைத் தம் வயிற்றில் சுமந்தவர்
முத்தான தம் அவயம் முற்றாக இழந்தவர்
சொத்தோடு சுகமெல்லாம் தாமிழந்து போனவரென
நித்தமும் நீள் கண்ணீர் வடிப்பவர்க்கு
புத்தாண்டு புதுப் பொங்கல் சித்திரை வருடமெல்லாம்
எந்தாண்டில் மகிழ்வு தரும்
வித்தகத் தமிழ் தாயே விரைந்து விடை பகராயோ

சங்கத் தமிழ் உடுத்து சந்தனமாய் கமழ்பவளே
இங்கு தமிழுயிர்கள் பதைப்பதறிவாயோ
சொந்த மண்ணிலேயே சொல்லொணாத் துயரம்மா
வெந்து போகின்றோம் வேதனைகள் அறிவாயோ

நீண்ட சரித்திரமாய் உனைநிறுத்த வேண்டுமென
வேண்டி உழைத்தவர்கள் வீரம் சோர்ந்ததுவோ
மாண்டு போயினரோ உன் மானம் காத்தவர்
ஆண்டுகள் போயிடினும் எம் அழுகுரல் ஓய்ந்திடுமோ

காந்தள் விரல்களுக்கு நகப்பூச்சு வேண்டும்
கண்ணாடி வளையல்கள் பல நிறத்தில் வேண்டும்
கால் கொலுசும் கல்லட்டியலும் கனமாக வேண்டுமென
வண்ணக் கனவுகளில் மூழ்கிய காலமெல்லாம்
வட்டுவாகலோடு வழிமாறிப் போச்சு

எத்தனை முயன்றாலும் என்னால் முடியவில்லை
எதையாவது பற்றி என்கவியில் பாட
அத்தனை துயர்கண்ட ஆறாத எந் நெஞ்சு
சத்தியமாய் மீளவில்லை மீளவும் முடியவில்லை

சிந்தனைக்குள் முழுவதும் சிற்பமாகிப் போச்சு
சித்திரவதைகளும் சிதைவடைந்த வரலாறும்
சந்ததிகள் அறிவாரோ சாவோடு தமிழினம்
சங்கமித்து வாழ்ந்த சரித்திரம் கொண்டதென்று

தமிழணங்கே உந்தனுக்கு விழாக்காண வந்தோம்
தனயர் எம் வாழ்வின் தரமதனை அறிவாயோ
நாய்கூடப் பாராது நாறிப் போனதம்மா
நாதியற்ற வாழ்வு நமதாகிப் போனதம்மா

நடைபிணங்களாக நமது நிலையாச்சு
தடைகளும் தோல்விகளும் உறவுகளாய் ஆச்சு
உடை மாறிப் போச்சு உளம் மாறிப் போச்சு
உடைந்திட்ட உணர்வோடு நாள் செல்லலாச்சு

இத்தனைக்கும் பின்னாலே இன்னும் சில தமிழர்
எத்தர்களாய் வாழ்கின்ற இழிநிலை கேளாயோ
எத்தனை நடந்தாலும் எமக்கில்லை துன்பமென
பித்தர்களாய் வாழும் பேரவலம் காண்பாயோ

கலாச்சாரம் எம் மண்ணில் சீரழிஞ்சு போச்சு
காலையிலே வணக்கம் ’குட்மோனிங்’ ஆச்சு
கலையோடு கைவண்ணம் அரிதாகிப் போச்சு
கலைகின்ற கனவாக தமிழ் மானமாச்சு

விருந்தோம்பல் வரவேற்பு வழிமாறிப் போச்சு
விருப்போடு தமிழ் பேசல் விதியாகிப் போச்சு
செருக்கோடு நிமிர்ந்த நடை சிதைவாகிப் போச்சு
செருப்பாகிப் பிற மொழிக்குள் சிலாகித்தலாச்சு

ஈழத் தமிழன் இனியும் பிழைப்பானோ
ஈனக் குரல் நெஞ்சில் ஓலமிடலாச்சு
ஈகைத்திறன் இவர்க்குள் அழிந்தொழிந்து போச்சு
இஃதே வாழ்க்கையென்று இவர் வாழலாச்சு

சேய் உதைத்து மிதிப்பதெல்லாம்
தாய்க்கு வலிப்பதில்லை அவளைக்
காயமுற வைத்த போதும்
கனிவோடு அணைத்திடுவாள்
தாயே தமிழ் மாதா உன்
தனயர் பிழை பொறுத்திடம்மா
நீயே பெரிதென்று அவர்
நினைந்து வரும் நாள் அருகில்
வேதனை வேண்டாம் தாயே
வேறு வழி விரைவில் வரும்
சோதனைகள் நீங்கும் உன்
சுந்தரத் தமிழ் கமழும்
…. …. ….. …..

4 comments:

  1. இலக்கண சுத்தமாக அருமையான கவிதை.. தமிழின் சிறப்பும்.. ஈழத்தின் இழப்பும்.. கனமான பார்வை..

    பாராட்டுக்கள்...

    ReplyDelete
  2. சுப்பர் கலக்கிடிங்க
    நல்ல இருக்கு

    ReplyDelete
  3. Sinthanaikalum Unarvukalum Athankamum arumaiya irukkirathu....

    ReplyDelete
  4. நன்றி செந்தில்,யாதவன், சசி... உங்கள் கருத்துக்களே என் கவிதைக்கு உரம்... தொடர்ந்தும் எதிர் பார்க்கிறேன்...

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!