Monday 17 December 2012

பெண்ணியம்... எனது பார்வையில் பாகம் 2



பெண்ணியம்..... எனது பார்வையில் -பகுதி 1க்கு இங்கே சொடுக்குங்கள்...


சில பெண்கள் தமது தனிப்பட்ட அபிலாசைகளை (உரிமை வேறு, ஆசை வேறு எனப்புரியாதவர்கள்) பூர்த்தி செய்வதற்காக பெண்ணியம் என்ற போர்வையைப் போர்த்துக் கொள்வதாகவே எனக்குத் தோன்றுகிறது. அதாவது, தாம் விரும்பும் உடைகள் அணியவும், தம்மை அலங்கரித்துக் கொள்ளவும், களியாட்டங்களில் ஈடுபடவும் இன்னும் பல ஆடம்பரவிடயங்களில் ஈடுபடவும், தமது சில நடத்தைகளுக்காகவும்.... மற்றவர்கள் கருத்துச்சொல்லக்கூடாது என்பதற்காகவே, தாம் பெண்ணியம் பேசுவதாக எண்ணிக்கொண்டு `எமக்கு உரிமையுண்டு..,  ’ஆண்கள் செய்தால் தவறில்லை, நாங்கள் செய்தால் தவறா?` போன்ற கேள்விகளை எழுப்பும் போது மிகவும் பரிதாபமாகத்தான் தோன்றுகிறது. இன்னும் சில மோட்டுத்தனமான பெண்ணியவாதிகள் குடும்பம் அல்லது திருமணம் பற்றி மிகவும் ஆபத்தான கருத்தை வளர்ந்துவரும் சமூகத்தில் விதைக்கிறார்கள். திருமணம் என்பது அவசியம் இல்லாத ஒன்று. அது சமூகத்துக்காக செய்யப்படுவதே..என்கிறார்கள்... ஆனால் இவர்கள் இயற்கையான பாலுணர்வை ஏற்றுக் கொள்கிறார்கள். இப்பாலுணர்வின் நிறைவு எமது சமூகத்தை, கலாச்சாரத்தைப் பொறுத்தவரையில்  திருமணம் என்ற கட்டமைப்புக்குள் மாத்திரமே சாத்தியம் என்பது இவர்களுக்கு கலாச்சாரக் கொடுமையாகத் தெரிகிறது. அப்போ இவங்க என்னதான் சொல்ல வராங்க????
இப்படிப்பட்ட மட்டமான பெண்ணிய..... மன்னிக்கவும் இது பெண்ணியமே இல்லை.. எனவே இவர்களை நான் பெண்ணியவாதிகள் என்று குறிப்பிடாமலே விட்டுவிடுகிறேன். இத்தகையவர்கள் இன்னும் ஒரு பெரும் தவறைச் செய்கிறார்கள். இதையே தமது அல்லது தம்மைச் சூழ உள்ள பெண் குழந்தைகளுக்கும் திணித்து விடுகிறார்கள்... ஆரோக்கியமற்ற, சமூக்க் கட்டுப் பாடற்ற ஒரு சந்த்தியைத் தோற்றுவிக்கும் அபாயத்தை இவர்கள் உண்டுபண்ணுகிறார்கள்.
தான் விரும்பிய ஆடையைத் தெரிவு செய்து அணிவது என்பது அவளது சுதந்திரம்... ஆனால் அந்த ஆடையின் தன்மையை அல்லது வடிவமைப்பை அவள் தெரிவு செய்வது விருப்பத்தினாலேயே... (என்ன கொழப்புறேனோ...) நாகரீக மோகம் கொண்டு அரைகுறை ஆடைகள், அல்லது அங்கம் பிரித்துக் காட்டும் அதிக இறுக்கமான ஆடைகள் , அளவுக்கு மீறிய முக ஒப்பனை... எதுக்குங்க... சும்மா இருக்கிற ஆம்பிளைகளைக் கூட என்னைத் திரும்பிப் பார் என்று அழைக்கிறீங்க??? (”சும்மா இருக்கிற ஆம்பிளைகளை”... #பனைமரத்துக்கு சேலையைச் சுற்றிவிட்டாலும் அதைச் சுற்றிச் சுற்றி வரும் ஆண்களே... நீங்க இதில சேர மாட்டீங்க என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.... ) சிலர் இதற்கு ஆடை அணிவது எமது சுதந்திரம்என்கிறார்கள்... ஆடை அணிவது சுதந்திரம் தான்... ஆனால் இப்படி ஆடை அணிந்து நீங்கள் வெளியே காட்டுவது உங்கள் அந்தரங்கம் அல்லவா?... அதை ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்? மற்றவர்கள் தம் பார்வையைத் திருத்திக்கொள்ளவேண்டும் என்பதை விட, நாம் நம்மை மாற்றுவது நல்லதல்லவா? ஆண்களைக் கவரும் அளவுகதிகமான உங்கள் ஒப்பனை இதோ உன் எதிர்ப்பாலினம் ஒன்று உனக்காக உன் கண்களுக்கு விருந்து கொடுக்கக் காத்திருக்கு என்று அழைப்பது போலல்லவா இருக்கு... இதன் மூலம் பெண்களை வெறும் மோகப் பொருளாகத் தோற்றுவிப்பதோடு, பெண்களின் பாதுகாப்பு கூட சில வேளைகளில் கேள்விக்குறியாகிவிடுகிறது.
சரி.. இந்தப் பெண்ணியம் பற்றிப் பேசுபவர்களைப் பற்றிய எனது பார்வையை நான் சற்று குறிப்பிட விரும்புகிறேன்.
இன்று உலகின் பல மூலைகளில் இருந்தும் பெண்ணியம் பேசும் குரல்கள் ஒலிக்கின்றன. அதற்கு ஆதரவான கரங்களும் நீள்கின்றன. அத்தனை பேரும் பெண்ணியம் பேசுகிறவர்கள் தானா, அல்லது நடைமுறைப்படுத்துபவர்களா என்ற கேள்வி எனக்குள் அடிக்கடி எழுகின்றது. பலர் இதைத் தற்காலத்தில் அதிகமாகப் பேசப்படும் ஒன்றாக இருப்பதனால் பேசுகிறார்கள்.. கைதட்டல்களையும் வாங்கிக்கொள்கிறார்கள். இதனால் இது இவர்களது நடைமுறை வாழ்க்கையில் இது கடைப்பிடிக்கப் படுவதில்லை. குறிப்பாக சில மேடைப்பேச்சாளர்களும், சில எழுத்தாளர்களும் இந்த வட்டத்துக்குள் இறங்கி விடுவதுண்டு. இவர்கள் பெண்ணியம் மட்டுமல்ல, சாதியம், அடக்குமுறை என்பனவற்றுக்கு எதிராகவும் பேசுவார்கள், ஆனால் அவர்கள் வாழ்க்கையில் எதுவும் இருக்காது. இன்னும் சிலர் இருக்கிறார்கள்... இவர்கள் பெண்ணியம் பேசுவதன் மூலமே பெண்களை இலகுவாக அணுக முடியும் என்ற வக்கிர புத்தி உள்ளவர்கள்.. ஏனென்றால் இக்காலத்தில் பெண்கள் ஓரளவு விழிப்படைந்து விட்டது இவர்களுக்கு பேரிழப்பாகவே இருக்கிறது. எனவே விழிப்படைந்து விட்டவர்களை இந்த முறையில் அணுகுவது கொஞ்சம் இலகுவாக இருக்கும் என நினைக்கிறார்கள்.
ஆனால் உண்மையிலேயே பெண்களுக்கு உரிமைகள் இருக்கின்றன, கருத்து சுதந்திரம் இருக்கிறது எனக் கருதுபவர்கள் இருக்கவே இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் பேசிக்கொண்டிருப்பதில்லை. செயலில் இறங்கி விடுவார்கள். அவர்கள் வாழ்க்கை இதற்கு ஒரு சாட்சி வாழ்க்கையாக இருக்கும். மேடைகளில் பெண்ணியம் பேசுவதலோ, அல்லது எழுதுவதாலோ மட்டும் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்பதை இவர்கள் புரிந்து கொண்டவர்கள்.
முதலில் குடும்பத்திலும், பின்னர் உறவுகளிடையேயும், பின்னர் தன் கிராமத்திலும்...  என தொடர்ந்து பெண்ணியத்தை நடைமுறைப் படுத்துபவர்களாக இருப்பார்கள். இத்தகையவர்களைக் காண்பது அரிது.
பெண்ணியம் பேசும் பெண்களைப் பற்றி நான் சிந்திப்பதுண்டு. உண்மையிலேயே பெண்ணியம் பற்றிப் புரிந்து கொண்டு பேசும் பெண்களை காணும்போது எனக்கு அப்படித் தோன்றுகிறது. அவர்களிடம் நான் காணுவது முதலாவது, அவை அடக்கம்இது நான் மிகமிக வரவேற்கும் ஒரு விடயம். விதண்டாவாதம் பண்ணுவதும், பொது இடத்தில் நின்று எகிறிக் குதிப்பதும் பெண்ணியம் ஆகாது. உங்களிடம் இருக்கும் கருத்தை பொருத்தமான நேரத்தில் எடுத்து, நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் நச் என்று அடித்து விட்டு அமைதியாகி விடுங்கள். அந்தக் கருத்து தன்பாட்டுக்கு சமூகத்தில் வேலை செய்யும். இந்த புரட்சியை தமது ஆடைகளிலும், தமது ஆரோக்கியமற்ற நடத்தைகளிலும் வெளிக்காட்ட முயல்கிறவர்களை பெண்ணியம் பேசுகிறவர்களாக நான் ஒரு போதும் ஏற்றுக் கொண்டதில்லை. இத்தகையவர்கள் தமது விருப்பு வெறுப்புக்காக பெண்ணியத்தை ஆயுதமாகக் கையில் எடுத்துக் கொள்பவர்கள். இது கூட ஒரு பலவீனம் என்றே நான் கருதுகிறேன். இவர்கள் பெண் சமத்துவம் பேசுகிறவர்களாக இருக்கும் அதே வேளை மேலைத்தேய நாகரீக விரும்பிகளாகவும் இருக்கிறார்கள். இரண்டுக்கும் முடிச்சு போட்டு பெண் சமூகத்தையே குழப்புகின்றவர்களாக இருக்கிறார்கள்.
ஒரு சிலர் ஆணாதிக்கம் பற்றிய கருத்துக்களை தமது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட காயங்களின் வலிகளாக வெளிப்படுத்துகிறார்கள். இது தவறல்ல. அனுபவமே ஆசான் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அது மட்டுமன்றி கருத்துக்கள் உணர்வுகளின் பிரசவிப்பே. ஆனால் அதனை மட்டுமே சுற்றிச் சுற்றி வருவது ஆபத்தை விளைவிக்கிறது.
இவர்கள் தம்மையறியாமலே தமது பாதிப்பைத்  சமூகத்துக்குள், முக்கியமாக தம் குடும்பத்திலுள்ள பெண் குழந்தைகளுக்குள் திணிக்க முயல்கிறார்கள். இதனால் இக்குழந்தைகள் சமூகம் பற்றிய அச்சம் உள்ளவர்களாகவோ அல்லது அவநம்பிக்கை உள்ளவர்களாகவோ வளரக் கூடிய சூழலை ஏற்படுத்தி விடுகிறோம். இவர்கள் வெளிப்படையாகவே ஆண்களை நம்பாதே என்று கூறி வருகிறார்கள். ஆண்கள் பற்றி விழிப்பாயிரு என்று கற்றுக் கொடுப்பது அவசியமானது தான். ஆனால் எப்போதும் அவர்களைச் சந்தேகக் கண்ணுடன் உலவும் இயந்திரங்களாக்கி விடாதீர்கள். என் சொந்த அனுபவத்தில் கூட நான் சந்தித்த ஆண்களில் 90 வீதமானவர்கள் தவறானவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்றால், அதற்காக மிகுதி 10 வீதத்தினரை புறம் தள்ளி விட நான் தயாராக இல்லை. அவர்களை இனம் காண வேண்டிய கடப்பாடு நமக்கு உள்ளது. அவர்கள் தான் இந்த சமூகத்தின் சீர் திருத்தத்திற்கு உதவக் கூடியவர்கள். அவர்கள் தான் அடக்குமுறையற்ற, நாம் எல்லோரும் எதிர்பார்க்கும் சமூகத்தை உருவாகத் தகுதியுள்ளவர்கள். இவர்களை இனம் காணுவதன் மூலம் அவர்களை இந்தவகையில்  நாம் ஊக்குவிக்க முயலலாம். இதற்கு இவர்கள் படிப்பறிவு உள்ளவர்களாகவோ அல்லது செல்வாக்கு உடையவர்களாகவோ இருக்க வேண்டும் என்பதில்லை. (அங்கே தேடினால் ஒரு வேளை தோற்றுப் போவீர்கள். பாமர மக்களிடையே தான் அதிகமாக பெண்மையை, பெண்களை மதிக்கிறவர்கள் இருப்பார்கள்). எனவே சொந்த வாழ்வின் அனுபவங்களைக் கொண்டு ஆணாதிக்கம் பற்றிப் பேசும் சகோதரிகள் தம்மை ஆராய்ந்து நிதானிக்க வேண்டியவர்களாகிறார்கள்.
ஆக மொத்தம் இக்கட்டுரையினூடாக நான் வலியுறுத்த நினைத்தது,  பெண்ணியவாதிகள் தாம் பேசுவது இன்னதென்று அறிந்து பேசவேண்டும். அவர்கள் கூறும் கருத்துக்கள் சுய தேவையை, அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதாக இருக்கின்றதா, அல்லது சமூக அக்கறையில் பேசப்படுகிறதா? அவ்ர்களது வாழ்க்கை சாட்சியான வாழ்க்கையாக இருக்கிறதா என்பதை தாமே நிச்சயித்துக் கொள்ளவேண்டுமென்ற் எதிர்பார்க்கிறேன். அது மட்டுமன்றி, வளர்ந்து வரும் பெண் சமுதாயம் எப்படி வழிநடத்தப் படுகிறது... அவர்கள் பெண்ணியம் சமத்துவம் என்ற பெயர்களில், ஆபத்தான வழியில் நடத்தப்படுகிறார்களா என்பதை இந்த சமூகம் அவதானித்து நெறிப்படுத்த வேண்டிய கடப்பாடு உடையதாகிறது...
தோழிகளே... அனைவரும் இணைந்து பெண்ணியம் பேசுவோம்.. பெண்களின் பெருமையை உயர்த்தும் வழியில் மட்டும்....





இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

4 comments:

  1. அழகான அலசல்...

    ReplyDelete
  2. பெண்ணியம் என்று பேசிக்கொண்டு சிலர் ஆண்களின் அந்தரங்களையும்,படுக்கையறையப் பச்சையாகப் பேசுவதுமே என்று நினைக்கிறார்கள் கோதை.சிலசமயங்களில் பெண்களான எங்களுக்கே அசிங்கமாயிருக்கிறது !

    ReplyDelete
  3. நன்றி ஆத்மா, நன்றி ஹேமா...
    உண்மை தான் ஹேமா. அந்த மனக்குமுறலின் ஒரு வடிவம் தான் இந்தப் பதிவு எனலாம். இதைப் பெண்ணியவாதிகள் புரிந்து கொள்ள வீண்டும்.. புரிந்து கொள்வார்களா?

    ReplyDelete
  4. பெண்களுக்கு சுதந்திரம் தேவை என்பதில் சந்தேகம் இல்லை..... ஆனால் அது எல்லை மீறும் போது கஷ்டம் பெண்களுக்கே என்பதில் கவனமாக இருந்தால் எல்லாம் நலமே........

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!