Wednesday 13 February 2013

இலட்சியத்தின் பாதையில் தொடர் 5 - (நிறைவுப்பகுதி)


இலட்சியத்தின் பாதையில் தொடர் 5

எதிர்பாராத நிதனின் வீரச்சாவு மகிழ்மதியை எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியதோ அந்தளவுக்கு அவளுடைய இலட்சியத்தில் இன்னும் உறுதியையும் ஏற்படுத்தியது. நிதனின் ஆசைப்படி போராட்டத்தில் நிறைய சாதிக்க வேண்டுமென்பது ஒரு வெறியாகவே ஏற்பட்டது. காதலியின் உள்ளத்துள் இலட்சிய விதையாகி விழுந்து வேரூன்றிய அவனது காதல், இப்பொழுது முளைவிட்டுக் கிளை பரப்பத் தொடங்கியது...

சில கடற்தாக்குதல்களுக்கு முழுமூச்சாக உழைத்து அதில் வெற்றி கண்டதால் தமிழீழத்தேசியத்தலைவரின் கையால் ஒரு மோட்டார்சைக்கிளைப் பரிசாகப் பெற்றுக் கொண்டாள் மகிழ்மதி. அவளது வேகத்தையும் உறுதியையும் கண்டு பொறுப்பாளர்கள் வியந்து நின்றனர். ஆனால் அது நிதன் விதைத்துச் சென்ற விதை என்பதை அவளது உள்ளம் மட்டுமே அறியும். தமிழ்மதி அவளைப் புரிந்துகொண்ட ஒரு தோழியாக எப்போதும் கூட நின்றாள். அவளது வெற்றியைக் கண்டு முதலில் பெருமிதப்பட்டவள் தமிழ்மதி தான்.

அத்தகைய நாட்களில் தான் ஒருநாள், ரோந்துக் கப்பல் ஒன்றை வழிமறித்து தாக்குவதற்கான ஆயத்தங்கள் எல்லாம் முடிந்தநிலையில் ஒவ்வொரு போராளியும் உள்ளத்தில் இதை எப்படியாவது வெற்றிகரமாக முடித்துவிட வேண்டுமென்ற படபடப்போடு காத்துக் கொண்டிருந்தனர். மகிழ்மதியும் தமிழ்மதியும் பிராதான கட்டளை நிலையத்தில் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருந்தனர். சிறப்புத்தளபதியின் கட்டளைகளுக்கேற்ப தாமும் தகவல்களை வழங்கிகொண்டிருந்தனர்... சண்டை ஆரம்பமாகிவிட்டிருந்தது...

ரோந்துக்கப்பல் வழிமறிக்கப்பட்டதும் காங்கேசந்துறைத்தளத்திலிருந்து டோராப் படகுகளும் புற்றிலிருந்து புறப்படும் ஈசல்கள் போல வந்து சேர, கடுமையான சண்டை நடந்து கொண்டிருந்தது.. போராளிகளின் சளைக்காத அடிக்கு ஈடு கொடுக்க முடியாமல் டோராப்படகுகள் திணற அந்தக் கணத்தில் கரும்புலியின் அதிவேகத் தாக்குதலால் ரோந்துக்கப்பல் பற்றி எரிந்தது... சில உயிர்த்தியாகங்கள் அந்த வெற்றியை ஈட்டிக் கொடுத்தது. தமிழ்மதி மகிழ்மதியின் துல்லியமான தகவல் பரிமாற்றங்களும் அந்த வெற்றிக்கு ஒரு காரணமானது... இப்பொழுது வெற்றிச்செய்தியை தொலைத்தொடர்பு சாதனங்கள் பரிமாறிக்கொண்டிருந்தன... தமிழ்மதி துள்ளிக்குதித்துக் கொண்டிருந்தாள்.. மகிழ்மதியோ.. நிதன்.. இந்த வெற்றிக்கு நீங்களும் கூட ஒரு காரணம் தான்... என்னால் இந்தளவுக்கு செயற்படமுடியுது என்டால் நீங்கள் தந்திட்டு போன இலட்சிய வெறி தான்.. என்று தன் மனதுக்குள் அவனை பூசித்துக் கொண்டாள்.

சே... இந்த பற்றிஇப்பிடிக் கழுத்தறுக்குது... நில்லு தமிழ்... நான் ஓடிப்போய் ஜெனரேட்டரைப் ஸ்ராட் பண்ணிட்டு வாறன்” 

என்று கூறிக்கொண்டே மகிழ்மதி ஜெனரேட்டர் கொட்டிலை நெருங்கிய அதே நேரம் ....

தம் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத இலங்கைக் கடற்படையினர் கரையோரப் பகுதிகளை நோக்கி பலாலியிலிருந்து சரமாரியாக எறிகணைகளை வீசத்தொடங்கினர்.. அப்படி வந்து விழுந்த முதலாவது எறிகணையின் சிதறல்களில் ஒன்று மகிழ்மதியின் பிடரிப்பகுதியைப் பதம் பார்க்க அப்படியே சரிந்தாள்..

தன் உயிர்த்தோழி தன் கண்களுக்கு முன்னாலேயே மடிந்து வீழ்ந்த அந்தக் காட்சியைக் காலம் பூராவும் மறக்க முடியாதவளானால் தமிழ் மதி.. கிட்ட்த்தட்ட அவளுக்குப் பைத்தியமே பிடித்தது போலானது.

இதன் பின்னர்.. கால மாற்றங்கள் முள்ளிவாய்க்கால் சரித்திரத்தை எட்டிவிட... தமிழ்மதி எப்படியோ அந்த கிராதகரின் கையில் அகப்படாமல் தன் உறவினரோடு கொழும்புக்கு வந்து சில மாதங்களுக்குள்ளாகவே தன் இயற்பெயரான மாதுரி என்ற பெயருடன்...  வெளிநாட்டு முகவர் ஒருவரின் உதவியுடன் வெளிநாடு வந்து விட்டாள் தமிழ்மதி.

புலம் பெயர்ந்து போனாலும் அந்த தாயகத்தாகமும் இலட்சியங்களும் தன் உயிர்த்தோழியின் நினைவுகளும் கூடவே அவள் மனதில் இன்னும் பசுமையாக. வாழ்ந்து கொண்டிருந்தன. இந்த நிலையில தான் அவள் தன் உயிர்த் தோழியை மாவீர்ர் தின மண்டபத்தில் படமாகக் கண்ட்தும் உள்ளே அமிழ்ந்து போயிருந்த வேதனைச்சிதறல்கள் இதயத்தைப் பிய்த்துக் கொண்டு வெளியேறின.

மாதுரியின் கதையைக் கேட்டுக் கொண்டே அவளை அழைத்து வந்து சமையலறையில் இருத்தி விட்டு  தன் சமையலையும் முடித்திருந்த வதனியின் கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தன.

நான் சின்ன வயதிலேயே லண்டனுக்கு வந்திட்டன் மாதுரி... போராட்டத்தைப் பற்றியும் அவங்கட தியாகங்களைப் பற்றியும் நான் எப்பவுமே அறிஞ்சிருக்கிறன்.. தங்கட சுக துக்கங்களையெல்லாம் இந்த இளம் வயதில தியாகம் செய்யுறாங்களே எண்டு எனக்கு பெரிய மதிப்பு அவங்களிட்ட இருந்தது.. ஆனால் இண்டைக்கு தான் ... தங்கட காதலைத் தியாகம் செய்து போராடின தையை நேரடியாக் கேட்டிருக்கிறன்... எனக்கு அந்த போராளிகளில இருந்த மதிப்பு இன்னும் உயர்ந்திருக்கு மாதுரி...” உணர்ச்சி பொங்க கூறினாள் வதனி.

மாதுரியின் கண்கள் இப்போதும் சுவரை இலக்கின்றி வெறித்துக் கொண்டிருந்தன... தன் தோழியினதும், அவளைப்போல ஆயிரமாயிரம் வேங்கைளினதும் கனவுகள் நனவாகுவது எப்போது... அதற்கு நான் என்ன செய்யலாம் என சிந்திக்கத் தொடங்கியிருந்தாள்... அவளுக்குள் நீறு பூத்திருந்த அந்த இலட்சிய நெருப்பு மீண்டும் பற்றிக் கொள்ளத் தொடங்கியது.. இனி அது தணியாது..

முற்றும்





இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

10 comments:

  1. இலட்சிய நெருப்பு மீண்டும் பற்றிக் கொள்ளத் தொடங்கியது.. இனி அது தணியாது..//அருமை அசத்தலான முடிவு

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கணையாழி அவர்களே.. தொடர்ந்தும் வருகை தந்து என் படைப்புகளை விமர்சியுங்கள்.. :)

      Delete
  2. கதையின் கருவுக்கு முதல் சல்யூட். அழகாக கதை சொல்லி இருக்கிறீர்கள். இந்த 5ம் பகுதி இன்னும் நிறைய எதிர் பார்த்தேன். அவசரமாக முடித்துவிட்டீர்கள். அடுத்ததில் பார்க்கலாம். தொடருங்கள். ஆரம்பியுங்கள் அடுத்த தொடரை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முகுந்தன்.. நீங்கள் சொன்னது போல் 5ம் பகுதி கொஞ்சம் அவசரமாக முடிந்து விட்டதை நானும் உணர்ந்தேன்.. நிச்சயமாக அடுத்த பதிவில் உங்களை ஏமாற்றாத வ்ண்ணம் பார்த்துக் கொள்கிறேன். இந்தத் தடவை அதர்காக மன்னிப்புவேண்டுகிறேன்..

      Delete
  3. ஆருயிர்க காதலன் நிதனையும் தொடர்ந்து அன்புச் சினேகிதி மகிழ்மதியையும் இழந்த தமிழ்மதியின் மனநிலையை அழகாகப் படம் பிடித்துக் காட்டினீர்கள்.

    இறுதிவரை விறுவிறுப்பாகவும் கதையின் இலக்கு தவறாமலும் அருமையாக எழுதியிருப்பது குறிப்பிடவேண்டியது.
    வலிமிகுந்திருந்தாலும் இலட்சியவேகத்துடன் அந்த இளம் சிட்டுக்களின் உணர்வுகளை அழகாகப் பின்னி எழுதி முடித்துள்ளீர்கள். அருமை. நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!

    இன்னும் வேறு படைப்புக்களையும் எதிர்பார்க்கின்றேன். தொடர்ந்து தாருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்கல் வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி இளமதி..:)
      தொடர்ந்து எழுதுவது தான் என் விருப்பம்.. :) எழுதுவேன்..

      Delete
  4. அடடா கோதை, முடிவுப் பகுதியை மட்டும் படித்தேன்ன்.. லண்டன் வரை கூட்டி வந்து முடித்திருக்கிறீங்க தொடரை.... இது கற்பனையா நிஜமா என எண்ணத் தோணுது, நேரில் பார்த்ததுபோலவே எழுதியிருக்கிறீங்க... நல்லாயிருக்கு எழுத்து. பெயர் சூட்டும்போது, வித்தியாசமானதாக வைத்தால் படிக்கும் எங்களுக்கு குழப்பம் வராது... அதாவது ரெண்டுமே மதி.. என வைக்காமல் சற்று மாறுதலானதாக.

    நேரம் கிடைக்கும்போது ஆரம்பம் படிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ்வ்.. என் வலைப்பூவே அதிர்ந்த மாதிரி தெரிஞ்சுது... எங்கட அதிரா...வந்திருக்கிறா... வாங்கோ.. வாங்கோ... உங்க வரவுக்கு மிக்க நன்றி..
      ///இது கற்பனையா நிஜமா என எண்ணத் தோணுது, நேரில் பார்த்ததுபோலவே எழுதியிருக்கிறீங்க.../// இது கற்பனைக் கதை இல்லை அதிரா... சந்தர்ப்பங்களும் பெயர்களும் மட்டுமே கற்பனை.

      ///பெயர் சூட்டும்போது, வித்தியாசமானதாக வைத்தால் படிக்கும் எங்களுக்கு குழப்பம் வராது... அதாவது ரெண்டுமே மதி.. என வைக்காமல் சற்று மாறுதலானதாக./// எனக்கும் அப்ப்டித்தான் தோன்றியது அதிரா... ஆனால் உண்மைக்கதையில் அந்த தோழிகளின் உண்மை பெயர் ஒரே மாதிரி முடியும்.. அதைவிட உண்மைக்கதையில் அவர்கள் மூன்று தோழிகள்மூவருக்கும் ஒரே மாதியான பெயர்கள் தான்.. நான் தான் வீணான குழப்பம் வேண்டாமே என்று மூன்றாவது நபரை கட் பண்ணிட்டேன்.. மூவரில் ஒருவர் மட்டுமே உயிரோடு இருக்கிறா என்று நினைக்கிறேன்.. ஆனால் இறுதிப்போரின் பின் அதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை... :(

      Delete
  5. இலட்சிய பாதையில் போனவர்கள் பின்னே பல கதைகள் இன்னும் வாழ்ந்து கொண்டே இருக்கு ஊர் மாறினாலும் உணர்வுகள் ஊடாக ஓன்றிச்செல்லும் நினைவுகளாக !அப்படித்தான் உங்களின் அரிய தொடர் இலச்சியப்பாதை பார்க்கின்றேன்!அருமையான அலட்டல் இல்லாத பின் புலத்தில் இயக்கையான நிகழ்வுகள் ஊடே இனவாத ஆக்கிரமிப்பையும் அதன் பாட்டில் போகும் நம் தூயவர்களின் அர்ப்பணிப்புப்பாதையையும் சொல்லி அருமையாக முடித்து இருக்கின்றீர்கள் தொடரை !

    உங்கள் தொட்ரை இன்று தான் பார்த்தேன்!சபாஸ் பூங்கோதை கவிதை கடந்து நல்ல தொடரையும் நகர்த்தும் அருமையான புலமை கண்டேன் உங்களிடம் கற்றுக்கொள்ள அதிகம் இருக்கு இந்த வழிப்போக்கணுக்கும்!

    ReplyDelete
  6. இன்னொரு வரலாற்றித்தொடரினை ,வாழ்வியலை பதிவுலகில் பகிர் வேண்டிக்கொள்கின்றேன் பலர் அறியும் வண்ணம்!

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!